வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை தொடர்ந்து நடப்பிலிருக்கும்.
வெளியே செல்லும்போதும் அனைவரும் முகக்காப்புகளுக்குப் பதிலாக முகக்கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பு இவ்விரண்டில் ஏதுனும் ஒன்றை அணிந்துகொண்டால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுகுறித்து நடத்தப்பட்ட மறுபரிசீலனைக்குப் பிறகு வெளியே செல்லும்போது முகக்காப்புக்குப் பதிலாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று இன்று (ஜூன் 1) அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதில் முகக்கவசம் அளவுக்கு முகக்காப்பு பாதுகாப்பு தராது என்று கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் அமைச்சுகள்நிலை பணிக்குழு முடிவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று கூறினார்.
“உடலிலிருந்து வெளியாகும் திரவத் துளிகள் மூலம் கொரோனா கிருமித்தொற்று பரவுகிறது. முகக்காப்புகள் சிறிதளவு பாதுகாப்பு வழங்குகின்றன. ஆனால் முகக்காப்பு அணிந்துகொள்ளும்போது முகத்துக்கும் முகக்காப்புக்கும் இடையே இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி மூலம் திரவத் துளிகள் வெளியேறலாம். முகக்கவசம் அணியும்போது இந்த நிலை ஏற்படாது,” என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.
எனவே, ஒருவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவர் முகக்காப்பு அணிந்துகொள்பவராக இருந்தால் அவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக அமைச்சர் விளக்கினார்.
முகக்காப்பு அணிந்துகொள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அவர்களில் ஆசிரியர்களும் அடங்குவர். முகக்கவசம் அணிந்துகொண்டு மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பது சாத்தியமற்றது. ஆகையினால் அவர்கள் முகக்காப்பு அணிந்துகொள்ளலாம்.
சுவாசப் பிரச்சினை போன்ற குறிப்பிட்ட சில உடல் உபாதைகள் கொண்டவர்களும் முகக்கவசத்துக்குப் பதிலாக முகக்காப்பு அணிந்துகொள்ளலாம்.
12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கும் முகக்காப்பு அணிந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.