'நிசர்கா' புயலால் பெரிய பாதிப்பில்லை

'நிசர்கா' புயலால் பெரிய பாதிப்பில்லை

2 mins read
57469aa3-3008-442a-a9f0-99a2be12e9dc
மும்பை கடலோரப் பகுதியில் வசிக்கும் இவர், குடும்பத்தினருடனும் அவசியமான உடைமைகளுடனும் பாதுகாப்பான இடம் நோக்கி மோட்டார்சைக்கிளில் விரைகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

அரபிக்கடலில் உருவான 'நிசர்கா' புயல் நேற்றுப் பிற்பகலில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அலிபாக்கில் கரையைக் கடந்தது.

புயல் காரணமாக தலைநகர் மும்பை உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வந்ததால் புனே நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டன.

மும்பையின் கடலோரப் பகுதிகளில் இன்று பிற்பகல் வரை மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 'பிடிஐ' செய்தி தெரிவித்தது.

மும்பை சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை விமானங்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மும்பை மாநகரம் புயலை எதிர்கொண்டது கடந்த 70 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.

அண்டை மாநிலங்களான மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் குறைந்தது 100,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயல் கரையைக் கடக்கும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

புயல் கரையைக் கடந்தபோது கடலோரப் பகுதிகளில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்ததில் வீடுகள் சேதமடைந்தன. மும்பை புறநகர்ப் பகுதியான சான்ட குரூசில் கட்டப்பட்டு வந்த ஒரு கட்டடத்தில் இருந்து சிமென்ட் கற்கள் பெயர்ந்து அருகில் இருந்த குடிசை மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர்.

இதனிடையே, புயல் நேற்று மாலையே வலுவிழக்கத் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக சூரத்திலும் மும்பையிலும் தயார்நிலையில் இருந்தன.

'நிசர்கா' புயலால் குஜராத்தின் தென்கடலோரப் பகுதியிலும் சொல்லிக்கொள்ளும்படியான பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.