சிங்கப்பூரில் மேலும் 517 பேரை கொவிட்-19 கிருமி தொற்றியது இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
சமூகத்தில் 15 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் இருவர் சிங்கப்பூர் வாசிகள் என்றும் எஞ்சிய 13 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த 15 பேரிடத்திலும் கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கிருமித்தொற்றால் முன்னர் பாதிப்பு கண்டவர்களுடன் அவர்கள் தொடர்பிலிருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
கொரோனா கிருமி பாதிப்பு கண்ட மற்ற அனைவரும் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள். இதையடுத்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டோர் எண்ணிக்கை 36,922ஆக உயர்ந்தது. நேற்று புதனன்று சமூகத்தில் எழுவரை கிருமி தொற்றியது உறுதியானது. இது, சமூகத்தில் இன்னும் கொரோனா பாதிப்பு மறைந்து இருப்பதைக் காட்டுவதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.
அந்த எழுவரில் ஒருவர் 81 வயதான சிங்கப்பூர் பெண். ஏற்கெனவே கொரோனா தொற்றியோருக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கடந்த மாதம் 29ஆம் தேதி அவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இரு கொரோனா தொற்றுக் குழுமங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவை இரண்டுமே வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள். 12, குவோங் மின் சாலை மற்றும் 8, துவாஸ் சவுத் லேன் என்ற முகவரிகளில் அவை அமைந்து இருக்கின்றன.
நேற்று 407 பேர் கிருமித்தொற்றிலிருந்து தேறி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 23,573 பேர் குணம் அடைந்துவிட்டனர். கிருமித்தொற்றால் இதுவரை 24 பேர் மாண்டுவிட்டனர். கிருமி தொற்றியும் வேறு காரணங்களால் ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர்.