எதிர்காலம் குறித்த நாட்டின் ஒட்டுமொத்த நம்பிக்கையைக் குறிக்கும் விதமாக சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையினர் தேசிய தின அணிவகுப்பைக் கொண்டாடியதைப் போல், இவ்வாண்டும் சிங்கப்பூரின் தேசிய தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வலியுறுத்தியுள்ளார்.
சிரமமான காலங்களிலும் சிங்கப்பூரர்கள் தேசிய தின அணிவகுப்பை நடத்தி, அணிதிரள்வது வழக்கம் என்ற அமைச்சர், அந்த நம்பிக்கையால்தான் சிங்கப்பூர் வலுவான நாடாக உருவெடுத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
தேசிய தினக் கொண்டாட்டங்கள் வீண்விரயம் என்றும் கொவிட்-19 கிருமித்தொற்று பொருளியலிலும் வேலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த வளங்களை வேறு எதற்கேனும் பயன்படுத்தலாம் என்றும் சிலர்
கருத்துரைத்தனர். அந்தக் கருத்துகளை வரவேற்ற டாக்டர் இங், தேசிய தினக் கொண்டாட்டங்களில் விவேகமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதையும் ஒத்துக்கொண்டார்.
கொண்டாட்டங்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் தொகையில் இவ்வாண்டு குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாடாங்கில் அல்லது மரினாபே மிதக்கும் மேடையில் அணிவகுப்பை
நடத்துவதற்கான உள்கட்டமைப்புச் செலவுகளை மிச்சப்படுத்தி இருப்பதன் மூலம் இது சாத்தியமாயிற்று.