சிங்கப்பூர் தற்போதைய நெருக்கடி யை வெல்வதோடு மேலும் வலுவடைந்த சமூகமாக மீண்டெழும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது தேசிய உரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைச் சாதிக்க அரசாங்கத்துக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான பங்காளித்துவம் துணைபுரியும் என்றும் கொள்ளைநோய், மோசமடைந்த பொருளியல் ஆகிய இரட்டை மிரட்டலை எதிர்கொள்ள அந்தப் பங்காளித்துவம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கக் கருவூலக் கட்டடத்திலிருந்து அவர் ஆற்றியது சிங்கப்பூரின் ஆறாவது, இறுதி தேசிய உரையாகும். கொரானா கிருமிக்குப் பிந்திய நாட்டின் எதிர்காலம் தொடர்பில் இந்த தேசிய உரைத்தொடர் அமைந்தது. சிங்கப்பூரர்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வடிவமைக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்பை திரு ஹெங் வெளியிட்டார். அடிப்படை, செயல்முறை ஆய்வுகளை ஆதரிக்க 20 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகம் எதிர்நோக்கும் பெரும் சவால்களுக்கு முன்னோடித் தீர்வுகளைக் கண்டறிய நமது மக்களை ஒன்றுதிரட்டும் வகையில் புத்தாக்கச் சவால்களை ஒரு தொடராகத் தொடங்க இருக்கிறோம். “‘ஒரு தலைமுறைக்கான நெருக்கடியைச் சமாளிக்கும் வகையிலான ஆதரவுத் திட்டங்களுக்காக அரசாங்கம் ஏற்கெனவே கிட்டத்தட்ட $100 பில்லியனை ஒதுக்கி உள்ளது. “நூறு நாட்களுக்குள் அடுத்தடுத்து நான்கு வரவுசெலவுத் திட்டங்களை தாக்கல் செய்வேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்தது இல்லை. நமது வரலாற்றில் அவ்வாறு நிகழ்ந்தது இல்லை. இந்த நடவடிக்கைகள் மூலம் வலுவான திட்டங்களை முன்வைத்திருக்கிறோம்.
நாம் இவ்வாறு செய்யாவிடில் பல்லாண்டு வளர்ச்சியையும் ஒட்டுமொத்த தலைமுறையையும் நாம் இழக்க நேர்ந்திருக்கும். “இப்போது நாம் ஒதுக்கி இருக்கும் தொகையில் பாதிக்கும் மேற்பட்டது நாட்டின் கடந்த கால நிதியிருப்பில் இருந்து பெறப்பட்டது. நமது முன்னோடித் தலைமுறை சிங்கப்பூரர்களின் சிரமத்தில் உருவான நிதி அது. “அவர்கள் சிந்திய ரத்தம், வியர்வை, கண்ணீரும் இந்த நிதியிருப்புகளை விட்டுச் சென்றுள்ளன. எனேவ, இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டவுடன் நமது தலைமுறையையும் நிதியிருப்புகளையும் மீண்டும் வளமாக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்,” என்று கேட்டுக்கொண்டார் நிதியமைச்சருமான திரு ஹெங்.