கொவிட்-19 பரிசோதனை: எதிர்க் கட்சிகளின் கூற்றுக்கு அமைச்சர் பதிலடி

கொவிட்-19 பரிசோதனை: எதிர்க் கட்சிகளின் கூற்றுக்கு அமைச்சர் பதிலடி

1 mins read
18f5c262-c4de-49ee-a1f8-4a8c92b24af5
வாம்போ சந்தையில் ஜலான் புசார் குழுத்தொகுதி வேட்பாளர்கள் ஹெங் சீ ஹாவ், வான் ரிசால் வான் ஸக்காரியா, திருவாட்டி டெனிஸ் புவா ஆகியோருடன் அக்குழுவுக்குத் தலைமை தாங்கும் திருவாட்டி ஜோசபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 நோய்த்தொற்று நெருக்கடி நிலையை மனிதவள அமைச்சு கையாளும் விதம், குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடத்தும் நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ பதிலடி தந்துள்ளார்.

கிருமித்தொற்று பரிசோதனைக்காக முதலாளிகள் தங்களது ஊழியர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டாம் என்று மனிதவள அமைச்சு முன்னதாக அறிவுறுத்தி இருந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய திருமதி டியோ, சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.

ஜாலான் புசார் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணிக்குத் தலைமை தாங்கும் அவர், வாம்போ சந்தையில் இன்று தொகுதி உலா சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.

"ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனைக்குப் படையெடுத்தனர் என்றால், சிகிச்சை தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நாங்கள் கவலைப்பட்டோம்," என்று விளக்கமளித்தார்.

உடல்நலமில்லாமல் இருப்பவர்கள் கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ளக்கூடாது என்று மனிதவள அமைச்சு ஒருபோதும் கூறியதில்லை என்று திருமதி டியோ தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து கருத்துரைத்த அவர், "வெறும் அரசியல் காரணங்களுக்காக உண்மையை மாற்றிப் பேசக்கூடாது. உண்மை எதுவென்று வாக்காளர்களுக்குத் தெளிவாகத் தெரியும் என நம்புகிறேன்," என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்