கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைச் சார்ந்திருப்பதில்லை என்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பால் தம்பையாவின் கூற்றை தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் மறுத்திருக்கிறார்.
அந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, தவறானவை என்று அந்தப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான திரு வோங் தெரிவித்தார்.
எப்போதும் அறிவியல் சான்றுகளையும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்த பின்னரே பணிக்குழு முடிவெடுத்து வருவதாக அமைச்சர் வோங் சொன்னார்.
ஊழியர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று முதலாளிகளைக் கேட்டுக்கொண்ட ஓர் ஆலோசனைக் குறிப்பிற்கும் மனிதவள அமைச்சே காரணம் என பேராசிரியர் பால் தம்பையா குற்றம் சாட்டியதாகக் கூறப்பட்டது.
அதனையும் தெளிவுபடுத்திய அமைச்சர் சான், கடந்த பிப்ரவரி மாதம் சிலேத்தார் விண்வெளித் துறைத் தொழிலியல் பூங்காவில் ஒரு கொரோனா தொற்றுச் சம்பவம் பதிவானதைத் தொடர்ந்து, அப்போது அந்த ஆலோசனைக் குறிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், உடனடியாக மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று, கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, கிருமி தொற்றவில்லை எனச் சான்று பெற்று வந்தால் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் என்று பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை அறிவுறுத்தியாக திரு வோங் விளக்கினார்.
மார்சிலிங் - இயூ டீ குழுத் தொகுதியில் உள்ள மக்கள் செயல் கட்சியின் உட்குரோவ் கிளையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது திரு வோங் இந்த விளக்கத்தை அளித்தார்.
“நோய்த்தொற்றியல் துறையில் ஒரு முன்னணி நிபுணர் என்ற வகையில் பேராசிரியர் தம்பையா மீது எனக்கு முழு மரியாதை உண்டு. ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக அவர் உண்மைகளைத் திரித்துக் கூறியது ஏமாற்றமளிப்பதாக உள்ளது,” என்றார் திரு வோங்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இப்படியெல்லாம் செய்யும் என எதிர்பார்த்து, தாம் முழுவதும் ஆயத்தமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஆயினும் பேராசிரியர் தம்பையாவிடம் இருந்து சிறந்தவற்றை எதிர்பார்த்து இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இறுதியில், சிங்கப்பூரர்கள் நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதைக் கண்டு, முடிவெடுக்கத்தான் போகிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online