கட்சியின் அரசியல் ஒளிபரப்புக்கு தமிழ் பேசும் அமைச்சரை அனுப்பியது, சிங்கப்பூர் தமிழர்கள் மீது மக்கள் செயல் கட்சி வைத்திருக்கும் மரியாதைக்கான அறிகுறி என்றார் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம். ஆனால் கட்சி அரசியல் ஒளி பரப்பில் தமிழ் பேசுபவரை நிறுத்துவதன் மூலம், சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் மதிப்பிற்குரியவர்கள் என்று மசெக தெரிவித்துக்கொள்ள விரும்பியதாக அவர் சொன்னார்.
“தமிழில் பேசித்தான் மக்களைச் சென்றடைவது என்றில்லை. அது முக்கியம்தான். ஆனால் தமிழ் மக்களை மதிக்கிறோம் என்ற மரி யாதைக்கான ஓர் அறிகுறி அது. இத்தகைய வழிகளில் அந்த மரியாதையை நாங்கள் காட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் மிக முக்கியமானவர்கள், மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்,” என்றார் திரு சண்முகம்.
நான்கு அதிகாரத்துவ மொழி களையும் மசெக மிக முக்கியமாகக் கருதுவதாக அவர் கூறினார். இதனாலேயே கட்சியின் அரசியல் ஒளிபரப்புகளில் நான்கு மொழிகளிலும் பேசுவதற்கு ஆட்கள் இருக்க வேண்டும் என்பதைக் கட்சி உன்னிப்பாகக் கடைப்பிடிப்பதாக அவர் விளக்கினார். மற்றக் கட்சிகளின் அரசியல் ஒளிபரப்புகளுக்கு தமிழ் பேசும் வேட்பாளர்களை அனுப்பாதது தொடர்பில் திரு சண்முகம் கருத்து தெரிவிக்கவில்லை.
“ஒவ்வொரு கட்சியும் அதன் சொந்த கணிப்பு என்ற ஒன்றை வைத்திருக்கும். ஏன் மற்றவர்கள் தமிழில் பேசவில்லை என்பதை நீங்கள் அவர்களிடமே கேட்கலாம்,” என்றார் அவர். நீ சூன் குழுத் தொகுதியின் மசெக அணித் தலைவராக திரு சண்முகம் உள்ளார். கட்சி ஒளிபரப்புகளின்போது குறைந்த எண்ணிக்கையில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். பொதுத் தேர்தலுக்கான முதல் கட்சி அரசியல் ஒளிபரப்பு சென்ற வியாழக்கிழமை அன்று இடம்பெற்றது. மசெக அதன் கட்சி அறிக்கையை நான்கு மொழிகளிலும் வெளியிட்டது. இந்நிகழ்வில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமிழில் பேசியிருந்தார். ஏழு கட்சிகளின் அரசியல் ஒளி பரப்புகள் இடம்பெற்றன.
மசெகவுடன் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் மக்கள் குரல் கட்சியும் தமிழ் பேசும் வேட்பாளர்களை அனுப்பியிருந்தன.
இருப்பினும் பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சீர்திருத்தக் கட்சி ஆகியவை அவ்வாறு அனுப்பவில்லை.
சீனத்தில் சென்ற வாரம் இடம்பெற்ற நேரடித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றுக்குப் பிரதிநிதியை அனுப்பாத பாட்டாளிக் கட்சி வெகுவாக விமர்சிக்கப்பட்டது. பிரசார ஓய்வு நாளான நாளை மறுதினம் அடுத்த கட்சி அரசியல் ஒளிபரப்பு இடம்பெறவுள்ளது.