சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து பயின்ற ஆறு மாணவர்கள் ‘ஜிசிஇ ஓ நிலைத்’ தேர்வுகள் எழுதியபோது அவர்கள் மோசடி செய்வதற்கு, கல்வி நிலையம் ஒன்றின் முதல்வரும் பயிற்றுவிப்பாளர்களும் உதவியதாக அவர்கள் மீதான குற்றம் இன்று (ஜூலை 7) நிரூபிக்கப்பட்டது.
அப்போது 17க்கும் 20க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாக இருந்த அம்மாணவர்கள் கைபேசி, ‘புளூடூத்’ சாதனங்கள் போன்றவற்றை கள்ளத்தனமாக தேர்வு எழுதும் அறைக்குள் எடுத்துச் சென்றனர்.
அந்தச் சாதனங்கள் வழியாக கேள்விகளுக்கான பதில்களை பயிற்றுவிப்பாளர்கள் இருவர் மாணவர்களுக்கு அளித்தனர். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்ற ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வில் இந்த மோசடி அரங்கேறியது.
விசாரணைக்குப் பிறகு, மூவர் குற்றவாளிகள் என நீதிபதி சே உய்வன் ஃபாட் இன்று தீர்ப்பளித்தார்.
தற்போது செயல்படாத ஸீயஸ் கல்வி நிலையத்தின் முதல்வராக இருந்த 54 வயது போ யுவன் நை, 33 வயது ஃபியோனா போ மின், 28 வயது ஃபெங் ரைவென் ஆகிய பயிற்றுவிப்பாளர்கள் என மூவரும் 27 முறை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிலையத்தின் இன்னொரு பயிற்றுவிப்பாளரான டான் ஜியா யான் இந்த மோசடியில் பங்கேற்றதற்காக அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை கடந்த ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்டது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மேற்கூறப்பட்ட பெண்கள் மூவரும் சிங்கப்பூரர்கள்; ஆடவரான ஃபெங் ரைவென் சீன நாட்டவர்.
மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு மாணவரும் ‘ஓ’ நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதற்கு தலா $8,000 திருவாட்டி போ யுவன் நையிடம் மற்றொரு சீன நாடவரான திரு டோங் ஷின் வழங்கினார். சிங்கப்பூரில் உள்ள பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் அந்த மாணவர்களைச் சேர்த்து படிக்க வைப்பது அவர்களது விருப்பம்.
தனித் தேர்வராக பதிவுசெய்துகொள்ளும் டான் ஜியா யான், தேர்வு அறையிலிருந்து கேள்விகளை மற்ற இரண்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு அனுப்பியதாகவும் அதற்கான பதில்களை அவர்கள் மாணவர்களுக்குத் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
மூன்று தேர்வுகளில் இத்தகைய மோசடி அரங்கேறிய நிலையில், அக்டோபர் 24ஆம் தேதி தேர்வு அறையில் கண்காணித்துக்கொண்டிருந்தவர், வித்தியாசமான சத்தம் வருவதைக் கண்டுபிடித்ததையடுத்து, மாணவர்களின் மோசடி அம்பலமானது.
இன்று குற்றம் நிரூபணமான மூவருக்கும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு சதிச்செயலுக்கும் குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.