ஒவ்வொரு சிங்கப்பூர் ஊழியரும் மேம்பட்ட திறன், சம்பளம் என்ற அம்சங்களின் அடிப்படையில் ஒரு ‘நகரும் படிக்கட்டு’ மேல் இருக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
கொவிட்-19 நெருக்கடியால் தனிப்பட்ட சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஊழியரணியில் புதிதாக இணைந்துள்ள இளம் தலைமுறையினர் அப்படிக்கட்டின் முதல் படியைத் தவற விட்டிருக்கலாம். அதே சமயம், நகரும் படிக்கட்டு திடீரென்று நின்றுவிட்டதை நடுத்தர மற்றும் மூத்த ஊழியர்கள் உணரலாம் என்று திரு தர்மன் உதாரணம் காட்டினார்.
“அது சிங்கப்பூரில் நடக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். இங்கு ஒவ்வொரு தலைமுறையும் ஒரு நகரும் படிக்கட்டு மேல் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
கொரோனா கிருமித்தொற்று சூழலால் முதலில் வேலையின்மை அதிகரிப்பை நிறுத்துவதற்கே முன்னுரிமை என்றார் அவர். 10,000க்கும் குறைவானோருக்கு இங்கு வேலை இல்லாத சூழலை ஹாங்காங், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் அவர் ஒப்பிட்டார்.
நன்கு நிர்வகிக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும் ஜெர்மனி, ஹாங்காங் போன்ற நாடுகளில் ஏற்பட்ட அதே வேலையின்மை நிலையை சிங்கப்பூர் அனுபவித்திருந்தால் 60,000 முதல் 70,000 வரையிலான சிங்கப்பூரர்களுக்கு வேலை இருந்திருக்காது என்று அவர் தெரிவித்தார்.
முதலாளிகளும் ஊழியர்களும் அமைப்புமுறையில் நம்பிக்கை கொண்டுள்ளதால் சிங்கப்பூர் இத்தகைய சவால்களைச் சந்திக்க நேரிடவில்லை என்றார் திரு தர்மன்.
முத்தரப்பு ஒருங்கிணைப்பு, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ளுதல், மற்ற நாடுகளைப் போல் இங்கு நடக்காதவாறு அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்ற எண்ணம் ஆகியவற்றால் நிலை மேம்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“வேலை இல்லாதோர் சிலர் புது வியாபாரம் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கான மானியத் திட்டங்களும் உண்டு,” என்று திரு தர்மன் கூறினார்.