ஏற்கெனவே இயங்கி வரும் அல்ஜுனிட்- ஹவ்காங் நகர மன்றத் துடன் இணைப்ப தற்குப் பதிலாக செங்காங் குழுத் தொகுதிக்காகப் புதிய நகர மன்றம் அமைப்பது பற்றி யோசித்து வருவதாக பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது. காணொளி மூலம் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.
“பொருளியல் அடிப்படையில் தனி நகர மன்றம் கொண்டிருப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் செங்காங்கிற்கு இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம். முன்னோக்கிச் செல்வதற்கான எங்களது அணுகுமுறை இது. நிர்வாக முகவர்களுடன் கலந்து பேசிய பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும்,” என்று சிங் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சி கைப்பற்றியது. மக்கள் செயல் கட்சி அணியை எதிர்த்துப் போட்டியிட்ட அக்கட்சி அணியினர் 52.13 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.
2011ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி முதல்முறையாக வென்றதைத் தொடர்ந்து, அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கான நகர மன்றமும் ஹவ்காங் தனித் தொகுதிக்கான நகர மன்றமும் ஒன்றிணைக்கப்பட்டன.
பின்னர் 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியில் பாட்டாளிக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அல்ஜுனிட்-ஹவ்காங்-பொங்கோல் ஈஸ்ட் என அக்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நகர மன்றம் விரிவாக்கம் கண்டது. ஆனால், மக்கள் செயல் கட்சியிடமிருந்து பாட்டாளிக் கட்சிக்கு அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கான நகர மன்றம் கைமாறியபோது பிரச்சினைகள் முளைத்தன. அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அத்தொகுதி நகர மன்றம் வழக்கு தொடுத்தது.
இதில் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து பாட்டாளிக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கான நகர மன்றம் பாட்டாளிக் கட்சி கட்டுப்பாட்டின்கீழ் அத்தொகுதியின் நிர்வாக முகவர் விலகிக்கொண்டது போன்ற பிரச்சினைகளை செங்காங்கிலும் சந்திக்கும் நிலை ஏற்படக்கூடுமா என்று திரு சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “நிலைமையை முன்கூட்டியே கணிக்க விரும்பவில்லை. செங்காங்கின் தற்போதைய நிர்வாக முக வர்களை நாங்கள் இன்னும் சந்தித்துப் பேசவில்லை. அவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்போம்,” என்றார்.
இதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய செங்காங் குழுத் தொகுதி பாட்டாளிக் கட்சி அணியை வழி நடத்தி வெற்றி கண்ட ஹி டிங்ரு, 37, கொவிட்-19 சூழலில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்த முடியாது என்பதால் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பாளர்களை அணுகுவது பற்றி பிறகு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.