சிங்கப்பூரில் கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் தடுமாறும் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் (RWS) குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஊழியர்கள் குறைக்கப்பட இருக்கின்றனர்.
எத்தனை பேர் வேலையிழப்பர் என்பது பற்றி அறிந்துகொள்ள RWS உடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது.
தற்போதைய ஊகிக்க முடியாத சூழலில் சுறுசுறுப்பாக விரைந்து செயல்படத் தேவையான மனித வளத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பதாக இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கையில் RWS குறிப்பிட்டது.
RWSல் கடந்த ஆண்டு இறுதி வாக்கில் சுமார் 7,000 ஊழியர்கள் இருந்தனர். இன்றைய ஆட்குறைப்பு நடவடிக்கையில் கிட்டத்தட்ட 2,000 பேர் வேலை இழந்ததாகக் கூறப்பட்டாலும் அந்நிறுவனம் எத்தனை பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்பது பற்றிக் குறிப்பிடவில்லை.
“கடந்த சில மாதங்களில் அனைத்து செலவுகளையும் மறு ஆய்வு செய்தோம்; அவசியமற்ற செலவுகளை நீக்கினோம். நிர்வாகிகளின் ஊதியம் 30 விழுக்காடு வரை குறைக்கப்பட்டது,” என்றது RWS.
அண்மைய மறு ஆய்வில், இந்த கடினமான முடிவை எடுக்க நேர்ந்தது என்று குறிப்பிட்ட RWS, கவனமாக ஆராய்ந்த பிறகு ஆட்குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது என்றது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அது தெரிவித்தது. பெரும்பாலான உள்ளூர் ஊழியர்கள் பணியில் வைத்துக்கொள்ளப்பட்டதாகவும் RWS தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள், அவர்களது குடும்பத்தாரின் சிரமங்களைப் பற்றி புரிந்துள்ளதாகக் குறிப்பிட்ட RWS, அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வேலையிழந்த ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிவதில் உதவ கடப்பாடு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை பொறுப்புள்ள வகையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய மனிதவள அமைச்சு, AREU, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றுடன் தமது மனிதவள அதிகாரிகள் பணிபுரிவதாக RWS குறிப்பிட்டது.