சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 481 பேருக்கு கொரோனா கிருமி தொற்று உள்ளது. இதனுடன் இந்நாட்டில் கொவிட்-19 கிருமிச்சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 50, 369க்கு உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் வேலை அட்டைதாரர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அத்துடன் சிங்கப்பூருக்கு வெளியில் இக்கிருமி தொற்றிய நான்கு பேர் இங்கு வந்திருப்பதாக அமைச்சு கூறியது. இவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா கிருமித்தொற்று மேலும் 11 விடுதிகளிலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. 28,000 ஊழியர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ள 17 கட்டடங்களைத் தவிர, அடுத்த மாதத்தின் தொடக்கத்திற்குள் ஊழியர் விடுதிகள் எதிலும் கிருமிப்பரவல் இல்லை என அறிவிக்கப்படலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
20 கிராஞ்சி ரோடு, பொத்தோங் பாசிர் அவென்யு ஒன்று, 63 சினோக்கோ டிரைவ், 5 சுங்கை கடுட் அவென்யு, 59 சுங்கை கடுட் லூப், 10 தாகூர் டிரைவ், 212 தாகூர் லேன், 16 டெக் பார்க் கிரெசண்ட், 23 டெக் பார்க் கிரெசண்ட், 50 டெக் பார்க் கிரெசண்ட் , 29 துவாஸ் வியூ வாக் ஆகியவை கிருமித்தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட அந்த 11 விடுதிகள்.