ஒருவர் கொவிட்-19 அல்லது டெங்கி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை 36 நிமிடங்களில் கண்டறிந்து சொல்லக்கூடிய ஓர் ஆய்வுமுறையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) லீ கோங் சியான் மருத்துவப் பள்ளி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதைப் போல நான்கு மடங்கு நேரத்தை அவ்விரு நோய்களுக்கான இப்போதைய பரிசோதனைகள் எடுத்துக்கொள்வதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இப்போதைக்கு, ‘பிசிஆர்’ எனும் ‘பல நொதிப்பொருள்கள் சங்கிலி வினை’ தொழில்நுட்ப முறையே கொவிட்-19 தொற்றைக் கண்டறிவதற்கான முக்கியமான வழியாக இருந்து வருகிறது. இந்த முறை துல்லியமானது என்றாலும், இதற்குச் சில மணி நேரங்கள் ஆகின்றன.
இந்த முறையில், நோயாளி ஒருவரின் சளி/எச்சில் மாதிரியில் இருந்து ‘ஆர்என்ஏ’ மூலக்கூறு பிரிக்கப்பட வேண்டியுள்ளது. இல்லையெனில், சளியில் இருக்கும் ‘மியூசின்’ போன்ற வேதிப்பொருட்கள், ‘பிசிஆர்’ பரிசோதனை முறை வேலை செய்யாமல் தடுத்துவிடும் எனக் கூறப்படுகிறது.
அத்துடன், விலையுயர்ந்த சோதனைக் கருவிகளும் நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களும் வேறு சில வேதிப்பொருட்களும் அந்த முறைக்குத் தேவை.
ஆனால், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘நேரடி பிசிஆர்’ முறை பரிசோதனையில் வணிகரீதியாகக் கிடைக்கும் நொதிப்பொருட்களும் வினைப்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றையும் நோயாளியின் சளி/எச்சில் மாதிரியையும் ஒரு சோதனைக்குழாயில் கலக்கும்போது, ‘ஆர்என்ஏ’ மூலக்கூறைப் பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் நேரடியாக சளி/எச்சில் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், குறுகிய காலத்தில் துல்லியமான முடிவுகளும் கிடைத்துவிடும்.
ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளோரில் ஒருவரான டாக்டர் சிவலிங்கம் பரமலிங்கம் சுப்பையா கூறுகையில், “எங்களது நேரடி பிசிஆர் முறையில் ‘ஆர்என்ஏ’ மூலக்கூறைப் பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்பதால் செலவை மிச்சப்படுத்தலாம்.
மேலும், ஆய்வகச் சோதனைகளுக்கான வினைப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் அதிக தேவை ஏற்பட்டுள்ள நிலையில் அந்தப் பிரச்சினையும் தவிர்க்கப்படுகிறது,” என்றார்.
கையடக்க ‘தெர்மோசைக்ளர்’ எனும் கருவியைக் கொண்டு, ஆய்வகத்திற்கு வெளியிலும் இந்த நேரடி பிசிஆர் முறை மூலம் சோதனை மேற்கொள்ள இயலும். இதன்மூலம், ஆய்வகத்தில்தான் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. முன்கள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைக் கொண்டு சமூகச் சுகாதாரப் பரமரிப்பு நிலையங்களிலும் இந்தச் சோதனை முறையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால், முடிவுகளுக்குக் காத்திருக்கும் நேரமும் குறையலாம்.
நடைமுறை உலகில் தங்களது சோதனை முறை எவ்வளவு செயல்திறன்மிக்கதாக இருக்கும் என்பதை அறிய மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக் குழுவின் தலைவரும் இணைப் பேராசிரியருமான திரு எரிக் யாப் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு, என்டியு மருந்தக நோயறிதல் ஆய்வகத்தில் இந்தப் புதிய முறையைக் கையாண்டு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள அவர்கள் இலக்கு கொண்டுள்ளனர்.
தாங்கள் உருவாக்கிய முறையின் மூலம் 28 நிமிடங்களிலேயே ஒருவர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய முடியும் என்றும் இணைப் பேராசிரியர் யாப் கூறினார்.