அரசாங்கம் அளித்த குறிப்பிடத்தக்க அளவிலான நிதி ஆதரவு காரணமாக, இந்த கொவிட்-19 நெருக்கடி காலத்தில், மிக மோசமான பொருளியல் தாக்கத்திலிருந்து ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்; ஆனால், இன்னும் அதிக ஆட்குறைப்புகள் மற்றும் கடுமையான காலகட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங் கூறியுள்ளார்.
இந்த சவாலான காலகட்டத்தில் ஒவ்வொரு ஊழியரையும் பாதுகாப்பது, அனைவரது வேலைகளையும் தக்கவைப்பது, உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவும் பராமரிப்பும் வழங்குவது என ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க என்டியுசி தயாராக இருப்பதாக, தமது இன்றைய (ஆகஸ்ட் 3) தேசிய நாள் செய்தியில் திரு இங் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் மட்டுமின்றி மற்ற பல நாடுகளிலும்பொருளியல், சமுதாய ரீதிகளில் கொவிட்-19 பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட என்டியுசியின் தலைமைச் செயலாளருமான திரு இங், சுகாதார நெருக்கடிகளும் இருப்பதைச் சுட்டினார்.
சமூகத்தைப் பாதுகாத்து, சிங்கப்பூர் தொடர்ந்து இயங்குவதற்காக, தன்னலமற்ற அர்ப்பணிப்பு செய்த முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் திரு இங்.
நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்டியுசி, அனைத்து விதமான செலவு குறைப்பு நடைமுறைகளை ஆராய்ந்து, ஊழியர்களின் வேலைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் திரு இங் குறிப்பிட்டார்.
ஆட்குறைப்பு நடவடிக்கை தவிர்க்க முடியாததாக இருப்பதால், கடந்த மாதம் என்டியுசி முன்வைத்த நியாயமான ஆட்குறைப்பு கட்டமைப்பின்படி, நிறுவனங்கள் ஊழியர்களை நியாயமான முறையிலும் மரியாதையுடனும் நடத்துவதை உறுதிப்படுத்துவதே முக்கிய முன்னுரிமை என்றார் திரு இங்.
சிங்கப்பூர் ஊழியரணியின் வேலையைப் பாதுகாப்பதும் சிறப்புத் திறன் படைத்த வெளிநாட்டு ஊழியர்களை தக்கவைத்துக்கொள்வதும் அந்த கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.