இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது.
அரசாங்கத்தின கொள்கைகளைச் செயல்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில் இன்றைக்குள் அமைக்க விரும்புவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.
இந்த முடிவு ராஜபக்சே சகோதரர்களுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது. அதிபர், பிரதமர் என்னும் இரு பெரும் பதவிகளில் இனியும் அவர்களே தொடரப்போகிறார்கள் என முடிவுகள் உணர்த்தின. வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு நேற்றுக் காலை 7 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கெல்லாம் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. மாலை 5.30 மணியளவில் 500,000க்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணி 320,704 (58.24%) வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தது.
அதற்கு அடுத்த நிலைகளில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 144,615 (17.51%) வாக்குகளையும் அனுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்தி 46,227 (5.6%) வாக்கு களையும் பெற்று இருந்தன.
முதல் மூன்று நிலைகளில் இக்கட்சிகள் வந்த நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 26,520 வாக்குகளைப் பெற்று நான்காவதாக இருந்தது. அக்கட்சிக்கு அந்த நேரத்தில் 3.21 விழுக்காடு வாக்குகளே கிடைத்திருந்தன. நேரம் ஆக ஆக இந்த வரிசையின் நிலைமை இந்நேரம் மாறி இருக்கலாம். முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று தெரிய வரலாம். வெற்றி நிலவரம் மாறினாலும் முதல் இடத்திலிருந்து மகிந்த ராஜபக்சேவின் கட்சியை அைசக்க முடியாத நிலை காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வாக்களித்துவிட்டு வெளியே வந்த பிரதமர் மகிந்த, 74, மூன்றில் இரு பங்கு இடங்களில் வெல்வோம் என்றார். டிசம்பரில் மக்களின் அமோக ஆதரவுடன் தமது சகோதரர் கோத்தபய அதிபராக வென்றதாகவும் அதேபோன்ற ஆதரவு இப்போது தமக்கும் கிட்டும் என்றும் அவர் கூறினார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றத்தில் மகிந்த பிரதமர் பொறுப்பேற்று ஆட்சியமைக்க 113 இடங்கள் போதுமானவை. ஆனாலும், மூன்றில் இரு பங்கு அறுதிப் பெரும்பான்மை பெற 150 இடங்களில் அவரது கட்சி வென்றாக வேண்டும். அவ்வாறு வென்றால்தான் 2015ஆம் ஆண்டு குறைக்கப்பட்ட அதிபரின் அதிகாரங்களை மீண்டும் பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடியும். அதன் பின்னரே கோத்தபய, 71, முழு அதிகாரம் பெற்ற அதிபராக வலம் வர முடியும்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திரு ராஜபக்சவுக்குத் தமது வாழ்த்துகளை தொலைபேசி வழி தெரிவித்தார்.
இடைக்கால பிரதமர் என்பதால் மகிந்தவும் மக்கள் நாயகனாகத் திகழமுடியாத நிலை. ஆக, சகோதரர்களின் ஆட்சிக்கரங்களை வலுப் படுத்த இத்தேர்தல் முடிவுகள் பேருதவி புரியும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.