சிங்கப்பூரில் மேலும் பல நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் பழையபடி மீண்டும் தொடங்குகின்றன. பலவும் திறக்கப்படு கின்றன. பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மாதம் வேலைக்குத் திரும்புவார்கள்.
கொவிட்-9 சூழலில் சிங்கப்பூர் மிகவும் எச்சரிக்கையுடன் வழக்கநிலைக்குத் திரும்புகிறது.
அனுமதிக்கப்படும் அவசிய பயணங்களை மேற் கொள்பவர்கள் இப்போது நிதி ஆதரவைப் பெறலாம். அதேவேளையில், ஊழியர்களுக்குக் காலக்கிரம முறைப்படி பரிசோதனைகள் நடத்தப்பட்டு கிருமிப் பரவல் ஆபத்து கூடுமான வரை குறைக்கப்படும்.
கொரோனா கிருமித்தொற்றைக் கையாள அமைக்கப்பட்டு உள்ள சிறப்புப் பணிக்குழு இவற்றுக்கெல்லாம் வழி வகுத்துள்ளது.
என்றாலும் கொவிட் -19 மறுபடியும் தலைதூக்கி விடாமல் தடுக்க எச்சரிக்கையும் விழிப்பு நிலையும் தேவை என்று அது வலியுறுத்தி இருக்கிறது.
உடலுறுதித் தேர்வு - செப்டம்பர் 30 வரை நிறுத்திவைப்பு
தயார்நிலை தேசிய சேவையாளர்களுக்கு உரிய தனிநபர் உடலுறுதித் தேர்வுகள் தொடர்ந்து செப்டம்பர் 30 வரை நிறுத்திவைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சு கைபேசி குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளது.இதேபோல் ஆயத்தப் பயிற்சியும் ஈடு செய்யும் பயிற்சியும் நிறுத்திவைக்கப்படும்.
இந்த நிறுத்திவைப்பு காரணமாக பாதிக்கப்படும் தேசிய சேவையாளர்களுக்கு, அவர்களுக்கு உரிய வருடாந்திர தனிநபர் உடலுறுதித் தேர்வு/ ஈட்டுத் தேர்வு நிபந்தனை ஒரு முறை தள்ளுபடி செய்யப்படும். இது பற்றி அடுத்த சில வாரங்களில் அவர்களுக்குக் கடிதம் வரும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர்: ஆறுமாத கால அவகாசம் தாராளமான ஒன்று
குடியிருப்பு, வர்த்தகம், தொழில்துறை கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றி முடிக்கவும் வீடுகளைக் கட்டி விற்பவர்கள் அவற்றை விற்கவும் கடந்த மே மாதம் கொடுக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசம் தாராளமான ஒன்று என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் வியாழக் கிழமை மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
முன்பு தேசிய வளர்ச்சி அமைச்சராக பணியாற்றிய திரு வோங், அந்த ஆறு மாத கால அவகாசத்தை அரசாங்கம் மேலும் நீடிக்குமா என்று கேட்டபோது, “சூழ்நிலையை அரசு தொடர்ந்து கண்காணித்துவரும். இது பற்றி தொழில்துறையினருடன் விவாதிக்கும்,” என்றார்.