கோழிக்கோடு: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன் குறைந்தது 40 பயணிகள் காயமடைந்திருப்பதாக இந்திய ஊடகங்களின் ஆரம்பகட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
191 பயணிகளைக் கொண்டிருந்த அந்த விமானம் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 7ஆம் தேதி) இரவு 7:40 மணியளவில் கனத்த மழைக்கு மத்தியில் தரையிறங்க தொடங்கியது. அப்போது விமான நிலையத்தின் ஓடுபாதையில் சறுக்கி இரண்டு துண்டாகப் பிளந்த அந்த விமானம் தீப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கிய போது அதன் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஓடுபாதையிலிருந்து விலகி அருகிலுள்ள பள்ளம் ஒன்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
நிவாரணப் பணிகள் குறித்து கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகத் தகவல் வெளிவந்துள்ளது. சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களது இரங்கலை வெளிப்படுத்தினர்.