கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றும் முன்களப் பணியாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு.
நாடெங்கும் அணிவகுத்துச் செல்லும் ராணுவ வாகனங்கள் கூ டெக் புவாட் மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, இங் டெங் ஃபோங் மருத்துவமனை, சிங்கப்பூர் எக்ஸ்போ தற்காலிக கொவிட்-19 வசதியிடம் போன்ற இடங்களை கடக்கும். அப்போது வாகனத்திலுள்ள படை வீரர்கள் மரியாதை செலுத்துவார்கள்.
ராணுவ வாகனங்கள், படைவீரர்களுடன் கொவிட்-19 தொற்றுநோய் முறியடிப்பில் பங்களித்துவரும் சுகாதார முன்களப் பணியாளர்களும் இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறுகின்றனர்.
மக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே அணிவகுப்பைக் கண்டு களிக்க வசதியாக வடக்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு,மேற்கு ஆகிய ஐந்து திசைகளிலும் அணிவகுப்பு செல்லும்.
ஒவ்வொரு பாதை வழியிலும் கிட்டத்தட்ட 14 ராணுவ வாகனங்கள் என மொத்தம் 66 வாகனங்கள் இந்த ஆண்டின் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
செம்பவாங், ஜூரோங், அங் மோ கியோ, செங்காங், தெம்பனிஸ் போன்ற தீவின் பல்வேறு பகுதிகள் வழியாக மொத்தம் 200 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஐந்து பாதை வழிகளும் உள்ளடக்கும்.
கொரோனா கிருமியுடன் போராடும் சுகாதார ஊழியர்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்க முடிவதில் மிகுந்த திருப்தி அடைவதாகக் கூறினார் கடற்படையைச் சேர்ந்த எம்.இ.2 அதிகாரி திரு ம. வெங்கடேஸ்வரன்.
இந்த 40 வயதுப் படை வீரர் ‘பிரோடெக்டர் யுஎஸ்வி’ எனும் கண்காணிப்புப் படகுக் கப்பலில் இடம்பெறுவார். இந்தப் படகுக் கப்பல் சிறப்பு வாகனத்தில் பவனி வரும்.
மேற்கு பாதை வழியே சென்று இங் டெங் ஃபோங் மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் மரியாதை செலுத்தவுள்ளார்.
18 ஆண்டுகளாக படையில் சேவையாற்றும் திரு வெங்கடேஸ்வரன், மூன்றாவது முறையாக தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்.
முகக்கவசம் அணிந்தவாறு வெளிப்புற ஒத்திகையில் கலந்துகொள்வது சுலபமல்ல என்ற எம்.இ.2 அதிகாரி திரு ம. வெங்கடேஸ்வரன், கொவிட்-19 கிருமித் தொற்று முறியடிப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய தாகக் கூறினார்.
“கடந்த 2018ஆம் ஆண்டில் மேரி மவுண்ட் கான்வண்ட் பள்ளியை பிரதிநிதித்து தேசிய தின அணிவகுப்பின் நிகழ்ச்சி அங்கத்தில் என் மகள் வஷ்மித்தா பங்கேற்றார்.
அணிவகுப்பின் நிறைவில் அதிபர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் என் மகளின் பங்களிப்பை அங்கீகரித்து அவரை கட்டிப்பிடித்தது மனதை நெகிழச் செய்தது. நாளை ஒளிவழியில் என் பங்களிப்பை பார்த்து என் 12 வயது மகள் பெருமிதம் கொள்வார்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் எம்.இ.2 அதிகாரி திரு ம. வெங்கடேஸ்வரன்.