சிங்கப்பூரர்களை ஒருங்கிணைத்து, கொவிட்-19 நெருக்கடி போன்ற இக்கட்டான சூழல்களில் இருந்து மீட்டுச் செல்லக்கூடிய திறமையும் மனமும் கொண்ட துடிப்பான, துணிச்சலான தலைவர்கள் நாட்டிற்குத் தேவை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடி உலகப் பொருளியலிலும் நம் வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் இடையூறு விளைவித்துள்ளதாக அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.
"கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் ஆற்றல் மீது சிங்கப்பூரர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நேர்மை, சேவை, உன்னதம் ஆகிய பண்புகளே அந்த நம்பிக்கையின் அடித்தளமாக விளங்குகின்றன. இப்போதைய சூழலில் அந்த அடித்தளத்தை வலுவாக்குவது மிக அவசியம்.
"எதையும் தெளிந்தறியும், தங்கள் நலனுக்கு மிகவும் உகந்தது எனும் கண்ணோட்டத்துடன் கூடிய, தங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளில் அதிக ஈடுபாடு கொள்ளும் மக்களை நாம் கொண்டுள்ளோம்.தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் நியாயம், சமத்துவம் போன்ற அறநெறிகள் தெளிவாகப் புலப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். வருங்காலத்தில், புதிய வழிகளை ஏற்படுத்தி, கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.
"இது, இந்தத் தலைமுறை சிங்கப்பூரர்களின் வலிமையையும் மீட்சித்திறனையும் சோதிக்கவல்லதொரு சவாலாக விளங்கும்.
"கொரோனா நெருக்கடி, பொருளியல் சூழலை மாற்றிவிட்ட நிலையில், நீண்டகாலமாகப் பயனளித்து வரும் சிந்தனைகளையும் உத்திகளையும் மறுஆய்வு செய்ய வேண்டி இருக்கும். வளர்ச்சிக்கான வழி தெளிவாகப் புலப்படாததொரு சூழலில் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய அல்லது தனித்துவமான தீர்வுகளை வழங்கவல்ல அரசாங்கப் பணியாளர்கள் நாட்டிற்கு இப்போது தேவைப்படுகின்றனர்," என்று அதிபர் ஹலிமா கூறியிருக்கிறார்.
மெய்நிகர் முறையில் இன்று நடந்த அதிபர் கல்விமான் விருது நிகழ்ச்சியின்போது திருவாட்டி ஹலிமா இவ்வாறு பேசினார்.
குமாரி அலிசா மேரி லீ லீ ஆன், 19, எனும் ராஃபிள்ஸ் கல்வி நிலைய முன்னாள் மாணவிக்கு மட்டுமே இவ்வாண்டு அதிபர் கல்விமான் விருது வழங்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு விருது நிகழ்ச்சி இடம்பெறவில்லை. எனினும், அதிபர் ஹலிமா காணொளி வழியாக குமாரி அலிசாவைச் சந்தித்து உரையாடினார். இந்த மெய்நிகர் சந்திப்பு நிகழ்வில் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் லீ ஸு யாங்கும் பங்கேற்றனர்.

