துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், ஊழியர்கள், வர்த்தகங்களுக்கான ஆதரவு எவ்வாறு தொடரப்படும் என்பது பற்றியும் கொவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது வாழ்வாதாரங்களை பாதுகாப்பது குறித்தும் அமைச்சு நிலை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி, திங்கட்கிழமை வெளியிட உள்ளார்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையப்பக்கம், சேனல் நியூஸ் ஏஷியா, சிஎன்ஏ938, மீடியாகார்ப் மீவாட்ச் ஆகியவற்றில் பிற்பகல் 3.30 மணிக்கு அவர் அறிக்கையை நேரடியாக வழங்குவார்.
கடந்த சில வாரங்களாக, பலர் தங்கள் வாழ்வாதாரங்கள் குறித்த கவலைகளையும் பதற்றநிலையைம் தம்முடன் பகிர்ந்துகொண்டதாக திரு திரு ஹெங் தமது பேஸ்புக் பதிவில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
“சில ஆதரவுத் திட்டங்கள் காலாவதியாகி வருவதால், அவர்கள் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர். நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ஆதரவை எவ்வாறு மேம்படுத்தி, விரிவாக்குவோம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை திங்களன்று அமைச்சரவை அறிக்கையில் தெரிவிப்பேன்,” என்று அவர் கூறினார்.
இந்த நெருக்கடி காலத்தில் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதேவேளையில், இதே அளவிலான ஆதரவை காலவரையின்றி தக்க வைத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
“பல துறைகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதால், ஆதரவு முறைகளை மாற்றி, மட்டுப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு வளர்ச்சித் துறைகளில் புதிய வாய்ப்புகளைப் பெற உதவுவது உட்பட இலக்குசார்ந்த ஆதரவை தொடர்ந்து வழங்குவோம்,” என திரு ஹெங் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட நான்கு வரவு செலவுத் திட்டங்களில் சம்பள மானியங்கள், வேலை ஆதரவு திட்டம், குடும்பங்களுக்கான ரொக்க வழங்கீடுகள், வாடகை மற்றும் வெளிநாட்டு ஊழியர் வரி தள்ளுபடிகள், சுயதொழில் செய்பவர்களுக்கு நிதி உதவி போன்றவை அடங்கும்.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பொருளியல் மந்தநிலை மோசமாகி வரும் வேளையில் திரு ஹெங்கின் அறிக்கை வந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 விழுக்காடு சுருங்கியது. வர்த்தக தொழில் அமைச்சு 2020ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 முதல் 7 விழுக்காடு வரை சுருங்கும் என்று தற்போது கணித்துள்ளது.
இரண்டாவது காலாண்டில், பொருளியல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 13.2% சுருங்கியது, முன்னர் மதிப்பிடப்பட்ட 12.6 விழுக்காடு வீழ்ச்சியைவிட குறைவானது என்பதுடன், மிகவும் மோசமான வீழ்ச்சியும் ஆகும்.
நிலைமையைப் பொறுத்து அரசாங்க ஆதரவு திட்டங்களை ஆய்வு செய்து மாற்றியமைக்க அரசாங்க நிறுவனங்களுடன் தீவிர விவாதங்களை நடத்தி வருவதாக இந்த வார தொடக்கத்தில், திரு ஹெங் கூறினார்.