உறைய வைக்கப்பட்ட உணவு மூலம் கொரோனா தொற்றும் அபாயம் 'மிகக் குறைவு'

2 mins read
8255e4d1-8225-4289-b274-a4c0352ab1fb
-

உறைய வைக்கப்பட்ட அல்லது குளிரூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் அசுத்தமாக இருந்தால் அவற்றின் மூலம் கொவிட்-19 தொற்றும் சாத்தியம் உண்டு என்றாலும் அதற்கான அபாயம் மிகக் குறைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கொவிட்-19 நோயை விளைவிக்கும் கொரோனா கிருமி குறைந்தது 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள சூழலில் நிலைத்திருக்கும் என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய்ப் பிரிவைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் பிஷ்ஷர் தெரிவித்தார்.

இறால், சால்மன் மீன், பன்றி இறைச்சி ஆகியவற்றில் சார்ஸ் -கோவ்-2 கிருமியை வைத்து அக்கிருமி தொடர்ந்து வாழ்கிறதா என்பது தொடர்பான ஆய்வை நிறைவேற்றினார்.

இத்தகைய உணவுப்பொருட்களின் ஏற்றுமதிக்கும் விற்பனைக்கும் மூன்று வாரங்கள் போதுமான கால வரையறையாக உள்ளது.

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியது முதல் இறக்குமதி செய்யப்படும் உணவு மூலமான கிருமிப்பரவல் அங்கு பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உணவுகளுக்கான குளிர்சாதன பணிமனையில் வேலைசெய்யும் நால்வருக்கு கொவிட்-19 தொற்று இருந்ததை அடுத்து அவர்கள் அங்கு தருவிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் மூலமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

கொவிட்-19 கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலிலிருந்து தருவிக்கப்பட்ட உறைந்த கோழி இறக்கைகளில் கிருமியைக் கண்டுபிடித்ததாக சீனா அண்மையில் தெரிவித்தது.

"முறையாக கையாளப்படாத உணவு வழியாக கொவிட்-19 பரவுவது சாத்தியம் என்றாலும் அதன் அபாயம் மிகக்குறைவு என்பது என் அனுமானம்," என்று டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் உருவாகும் கிருமித்தொற்றுகளுக்கான திட்டத்தின் துணை தலைவர் பேராசிரியர் ஊய் எங் இயோங் கூறினார்.

இக்கிருமி உணவு மூலமாகவோ உணவுப் பொட்டலங்கள் மூலமாகவோ பிறருக்குப் பரவும் என்பதற்கான ஆதாரம் தற்போது இல்லை என்றாலும் மாற்றங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் இங்குள்ள உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.