புதுடெல்லி: சுதந்திர தின விழாவில், “உலகை வழிநடத்தும் அளவுக்கு இந்தியா முன்னேற வேண்டும்,” எனக் கூறிய பிரதமர் மோடி, “காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே இந்திய நாட்டின் 74வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.
விழாவின்போது, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, 7வது முறையாக டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதே சத்தில் தொகுதி மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படும்.
“காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது வளர்ச்சியின் பலன்களைக் காஷ்மீர் அனுபவித்து வருகிறது. தொகுதி மறுவரையறை பணிகள் நீதிமன்ற அறிவுரையின்படி தற்போது நடைபெற்று வருகின்றன.
“வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க இந்தியா உறுதி கூறியுள்ளது. நம் நாட்டு பெண்கள் சுரங்கங்களில் வேலை செய்தும் போர் விமானங்கள் ஓட்டியும் வானத்தை தொடுகிறார்கள்.
“பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம். அவர்கள் தாக்கல் செய்யும் அறிக்கையை வைத்து பெண்களின் திருமண வயதை நிர்ணயம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
(மேல் விவரங்கள், நாளைய அச்சுப்பிரதியில்...)