கொவிட்-19 கிருமிப்பரவல் உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலவியதன் காரணமாக ஏற்பட்ட பொருளியல் பாதிப்பு மிகக் கடுமையானது என்று சிங்கப்பூரின் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளியல் இவ்வாண்டு 5 விழுக்காடு சுருங்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கப்பூரின் காலாண்டு வளர்ச்சி விகிதம் ஆக மோசமாக உள்ளது. 2020ன் இரண்டாம் காலாண்டின் ஆண்டு அடிப்படையில் இந்நாட்டின் வளர்ச்சி விகிதம் 13.2 விழுக்காடு குறைந்துள்ளது.
சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் பல நடவடிக்கைகளைப் பாதுகாப்பாகவும் நீடிக்கக்கூடிய விதமாகவும் தொடர அமைச்சர்நிலைப் பணிக்குழு பாடுபடுவதாகவும் திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூர் தொடர்ந்து விழித்திருக்கும்படிக் கேட்டுக்கொண்ட துணைப்பிரதமர், அனைத்துலகப் பயணங்களுக்கான பாதுகாப்பான நிர்வாகமும் கட்டுப்பாடுகளும் தொடரும் என இன்று பிற்பகல் தெரிவித்தார்.
ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்குமான சில உதவி நடவடிக்கைகள் விரைவில் முடிவடையப்போவதாகக் குறிப்பிட்ட திரு ஹெங், மூன்று இடங்களில் சிங்கப்பூர் எப்படி உத்திபூர்வமாக செயல்படும் என்பதை விளக்கினார். அந்த மூன்று இடங்கள்:
- தற்போதுள்ள வேலைகளுக்கான ஆதரவைத் தொடர்வது மற்றும் புதிய வேலைகளை உருவாக்குவது
- ஆகக் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளுக்கான கூடுதல் ஆதரவு
- கொவிட்-19க்குப் பிந்திய உலகிலுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த தயாராவது
(துணைப்பிரதமர் ஹெங்கின் அறிவிப்புகளைப் பற்றிய விரிவான விவரங்கள், நாளைய அச்சுப் பிரதியில்...)