வேலையிழந்த அல்லது வருமானத்தின் பெரும்பகுதியை இழந்த சிங்கப்பூரர்களுக்கு உதவும் மானியம் டிசம்பர் வரை நீட்டிக்கப்படும்.
மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு 800 வெள்ளி வழங்கிய கொவிட்-19 ஆதரவுத் திட்டம் மே மாதத்தில் தொடங்கியது. இந்த மானியத்திற்கான விண்ணப்பம் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு முடிவடைய வேண்டியிருந்தது.
கிட்டத்தட்டட 60,000 பேருக்கு இந்தத் திட்டத்தின் மூலம் 90 மில்லியன் வெள்ளிக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
இந்த மானியத்திற்குத் தகுதிபெற, வேலையில்லாத விண்ணப்பதாரர்கள் தாங்கள் மும்முரமாக வேலை தேடுகிறார்கள் அல்லது பயிற்சியை மேற்கொள்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவேண்டும். இது குறித்த மேல் விவரங்களை சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கும் என்றார் நிதியமைச்சரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங்.
சிங்கப்பூரின் வேலைச்சந்தை இந்த ஆண்டின் முடிவுக்குப் பிறகு தொடர்ந்து நலிவாக இருக்கக்கூடும் என்று அவர் கூறினார். நோய்ப்பரவல் முறியடிப்புக் காலக்கட்டால் அடுத்த சில மாதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலான வர்த்தக மூடல்களையும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம் என்று பொருளியல் நிபுணர்கள் ஏற்கெனவே கூறியுள்ளனர்.
(துணைப்பிரதமர் ஹெங்கின் அறிவிப்புகளைப் பற்றிய விரிவான விவரங்கள், நாளைய அச்சுப் பிரதியில்...)