ஊழியர்களுக்கு உதவும் விதமாக வேலை ஆதரவுத் திட்டம் மேலும் ஏழு மாதங்கள் வரை நீட்டிக்கப்படுவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) அறிவித்துள்ளார். வேலைகளைப் பாதுகாக்கவும் புதிய வேலைகளை உருவாக்கவும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்றவும் மேலும் 8 பில்லியன் வெள்ளி செலவிடப்படும் என்று திரு ஹெங் தெரிவித்து இருக்கிறார்.
வேலை ஆதரவுத் திட்டம் போன்ற அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரவிருந்த நிலையிலும் உலகப் பொருளியல் மந்தநிலை தொடரும் நிலையிலும் அரசாங்கத்தின் கூடுதல் ஆதரவுத் திட்டங்கள் குறித்து அமைச்சர்நிலை அறிக்கை வாயிலாக துணைப் பிரதமர் இன்று அறிவித்தார்.
வேலைகளுக்கான ஆதரவைத் தொடர்ந்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குதல், கொவிட்-19க்குப் பிந்திய உலகத்தில் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளும்படி சிங்கப்பூரை நிலைநிறுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நிதியமைச்சருமான திரு ஹெங் சுட்டினார்.
உள்ளூர் ஊழியர்களுக்கு உதவும் வேலை ஆதரவுத் திட்டம், வேலையின்றி இருக்கும் அல்லது குறிப்பிடத்தக்க வருமான இழப்பைச் சந்தித்துள்ள சிங்கப்பூரர்களுக்கான கொவிட்-19 ஆதரவு மானியம் போன்ற திட்டங்கள் நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
150,000க்கும் அதிகமான நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு வேலை ஆதரவுத் திட்டம் மூலம் இதுவரை $16 பில்லியனுக்கும் மேலான தொகை வழங்கப்பட்டுள்ளது.
“ஆயினும், இப்போதைய நிலையிலேயே வேலை ஆதரவுத் திட்டத்தைத் தொடர முடியாது. அதற்கு நமது கையிருப்பில் இருந்து அதிகமான நிதியைப் பெற வேண்டும். அத்துடன், சாத்தியமில்லாத தொழில்களில் நமது ஊழியர்களைச் சிக்க வைத்துவிடும் அபாயமும் உள்ளது. சில துறைகள், மற்ற துறைகளைவிட வேகமாக மீண்டு வருகின்றன,” என்று திரு ஹெங் விளக்கினார்.
இம்மாதம் வரை அறிவிக்கப்பட்டிருந்த வேலை ஆதரவுத் திட்டம் 2021 மார்ச் வரை நீட்டிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு துறையும் எந்த வேகத்தில் மீளும் எனும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் சம்பள மானிய ஆதரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள விண்வெளி, விமானப் போக்குவரத்து, சுற்றுலா ஆகிய துறைகள் இன்னும் ஏழு மாதங்களுக்கு 50% சம்பள மானியத்தைப் பெறும். கட்டடச் சூழல் துறையும் இன்னும் இரு மாதங்களுக்கு 50%, அதன்பின் ஐந்து மாதங்களுக்கு 30% சம்பள மானிய ஆதரவைப் பெறும்.
மற்ற துறைகளில் பெரும்பாலானவை அடுத்த மார்ச் மாதம் வரை 10% சம்பள மானியத்தைப் பெறும்.
(துணைப்பிரதமர் ஹெங்கின் அறிவிப்புகளைப் பற்றிய விரிவான விவரங்கள், நாளைய அச்சுப் பிரதியில்...)