நாடாளுமன்றத்தில் அதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பதன் விளைவாக கண்ணோட்டங்களைப் பொறுத்தவரையில் கூடுதல் பன்முகத்தன்மையும் பலமான விவாதங்களும் இருக்கும் என்று அவைத்தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்திருக்கிறார். ஆயினும், இந்தப் பன்முகத்தன்மையால் சிங்கப்பூரோ அதன் மக்களோ தங்களுக்குள் பிளவு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை எப்போது ஏற்படுவதில்லை என்பதற்கு வெளிநாடுகளில் பல முறை தென்படுவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி கூறினார்.
“சிங்கப்பூர் மற்றும் இந்நாட்டு மக்களின் நலனுக்கு மேலும் சிறப்பாக சேவையாற்றும் வகையில் கண்ணோட்டப் பன்முகத்தன்மையை ஆக்ககரமான முறையில் பயன்படுத்துவதே நமது இலக்காக இருக்கவேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் நாடாளுமன்றத்தில் தற்போது 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 10 பேர் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய இருவர் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
பிரித்தம் சிங், சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் திரு சிங், பிரதமர் லீ சியன் லூங்கிற்கு எதிரே அமர்வார். ‘‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்ற பொறுப்பை அங்கீகரிக்கும் பிற நாடுகளின் நாடாளுமன்ற வழக்கத்திற்கு இந்த ஏற்பாடு ஒத்துப்போவதாக குமாரி இந்திராணி தெரிவித்தார்.
பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ பாணியிலான நாடாளுமன்றங்களில் பின்பற்றப்படும் வழக்கங்களை அரசாங்கம் கருத்தில் கொண்டிருப்பதாக குமாரி இந்திராணி தெரிவித்தார். “சிங்கப்பூரின் தற்போதைய அரசியல் மற்றும் நாடாளுமன்றச் சூழலை நான் வகுத்துள்ள முறை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கொள்கைகள், மசோதாக்கள் குறித்த முதல் கேள்விகளை திரு சிங், நாடாளுமன்ற வழக்கங்களின் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டு அமைச்சர்களுக்கு முன்வைக்கலாம். அமைச்சர் பதவியில் இருப்பவர்களுக்கு இணையாக திரு சிங், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு 40 நிமிட கால அவகாசம் கொடுக்கப்படும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அவருக்கு தனி அலுவலகம், பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் இரு மடங்கு தொகை அவருக்கு வழங்கப்படும். இந்த ஊதியத்தில் பாதி, நன்கொடை நிறுவனங்களுக்கு வழங்கப்போவதாக திரு சிங் உறுதியளித்திருந்தார்.
(மேல் விவரங்கள், நாளைய அச்சுப் பிரதியில்…)