இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி இன்று காலமானார். அவருக்கு 84 வயது.
ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கொரோனா கிருமி இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவருக்கு செயற்கை உயிர்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இது குறித்து திரு பிரணாப்பின் மகன் அபிஜித் முகர் தமது டுவிட்டர் பக்கத்தில் சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு 8.16 மணிக்கு அறிவித்தார்.
இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக இருந்த திரு பிரணாப், 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு அந்நாட்டின் ஆக உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ விருதை வழங்கினார்.
1935ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்திலுள்ள பிர்பூம் மாவட்டத்தின் மிராட்டி என்ற சிறு கிராமத்தில் பிறந்த திரு பிரணாப்பின் அரசியல் பணி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் நீடித்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 1969ஆம் ஆண்டில் மிட்னான்பூரில் நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் சுயேட்சை வேட்பாளர் விகே கிருஷ்ண மேனனுக்காக வெற்றிகரமாக பிரசாரம் செய்தார். அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திரா காந்தி அவரை தமது கட்சியில் சேர்த்துக்கொண்டார். அதே ஆண்டில் திரு பிரணாப் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார்.
அதன் பிறகு திரு பிரணாப், திருமதி இந்திரா காந்தியின் காங்கிரசில் முக்கிய இடம் வகித்தார். 1982ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டுவரை அவர் இந்தியாவின் நிதியமைச்சராகவும் 1980ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை மேலவைத் தலைவராகவும் இருந்தார்.
திரு பிரணாப், தமது மகன்கள் அபிஜித், இந்திரஜித் ஆகியோரையும் மகள் ஷர்மிஸ்தாவையும் விட்டுப் பிரிகிறார். அவரது மனைவி சுவ்ரா முகர்ஜி, ஆகஸ்ட் 2015ல் 74 வயதில் காலமானார்.