சிங்கப்பூரில் இன உணர்வு குறைந்து, வேற்றுமைகளைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை அதிகரித்து வருவதாகக் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில், இன உணர்வுக்கு அப்பாற்பட்ட, சீரிய நிலையை எட்டிவிட்டதாக அல்லது வெவ்வேறு குழுக்களுக்கு இடையே இனியும் இணைப்பு நடவடிக்கைகள் தேவையில்லை என்ற ஒரு நிலையை எட்டிவிட்டதாக சிங்கப்பூரர்கள் எண்ணிவிடக்கூடாது என்று திரு டோங் கூறியிருக்கிறார்.
"இனமும் சமயமும் பிரிவினையை ஏற்படுத்தவல்ல, உணர்வுபூர்வமான விஷயங்கள். இப்போது நாம் எட்டிய நிலையில் இருந்து பின்னோக்கிச் செல்லும் அபாயம் எப்போதுமே உள்ளது. நமது முன்னேற்றம் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என நாம் கருதிவிடலாகாது," என்று நாடாளுமன்றத்தில் நேற்று அதிபர் உரை மீதான விவாதம் தொடர்பாகப் பேசியபோது அமைச்சர் டோங் சொன்னார்.
உண்மையில், எந்த விதத்திலும் சிங்கப்பூர் லட்சிய நிலையை எட்டிவிடவில்லை என்ற அவர், சிலருக்குப் பாகுபாடு என்பது உணர்வுபூர்வமானதாக, யதார்த்தமானதாக நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டார். இன்னும் சிறந்த நிலையை எட்டுவதற்கான வழிகளை தொடர்ந்து நாம் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இத்தனை ஆண்டுகாலமாக இன, சமய விவகாரங்களில் சிங்கப்பூர் அடைந்துள்ள முன்னேற்றம் இயற்கையாகவே நிகழவில்லை என்ற அமைச்சர், குறிப்பாக தங்களுடைய பெற்றோர் அல்லது பாட்டனார் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் ஒற்றுமையிலும் இணக்கத்திலும் லட்சிய நிலையை இன்றைய இளைய தலைமுறை நெருங்கியிருப்பதாகக் கூறலாம் என்றும் சொன்னார்.

