லிட்டில் இந்தியா, சைனாடவுன் போன்ற இடங்களில் வெளிநாட்டு ஊழியர்களின் வருகையைச் சார்ந்திருக்கும் வர்த்தகங்கள் தற்போது கொவிட்-19 நோய்த்தொற்றால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளைச் சமாளிக்க முடியாததால் சில கடைக்காரர்கள் தொழிலை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலவரத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு கடந்த புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பீப்பல்ஸ் பார்க் காம்ப்ளெக்ஸ் கடைத்தொகுதிக்குச் சென்றது. அங்கு ஒவ்வொரு மாடியிலும் ஆறேழு கடைகள் மூடப்பட்டிருந்தன. அந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவை வழங்கும் வர்த்தகங்கள், கைபேசி விற்கும் கடைகள், சிம் அட்டையில் பணம் நிரப்பும் சேவை வழங்கும் கடைகள் போன்றவை மூடப்பட்டுவிட்டன.
கொவிட்-19 நிலவரத்தால் வர்த்தகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பீப்பல்ஸ் பார்க் காம்ப்ளெக்ஸ், ஹோங் லிம் காம்ப்ளெக்ஸ், சைனாடவுனின் மற்ற இடங்களில் உள்ள வாடகைதாரர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் பொருளியல், சமூக நடவடிக்கைகள் கட்டங்கட்டமாக தொடங்கியும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
லிட்டில் இந்தியாவில் செயல்படும் வர்த்தகங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வார நாட்களில் மாலை வேளையில் முஸ்தஃபா சென்டரில் வழக்கமான கூட்டம் இல்லை. மளிகைக் கடைகள், உணவுக் கடைகளில் ஒரே நேரத்தில் ஓரிரு வாடிக்கையாளர்கள் மட்டும் காணப்பட்டனர்.
"ஒரு சில நாட்களுக்குப் பிறகும் பழங்களும் காய்கறிகளும் விற்கப்படவில்லை என்றால் அவை அனைத்தும் வீணாகிவிடும்," என்று காய்கறி வியாபாரி ராஜு ரவிச்சந்திரன், 31, கூறினார். ஒரு காலத்தில் அவரது கடைக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோர் வந்து காய்கறி வாங்கினர். எனினும், கொவிட்-19க்கு முந்தைய நிலைக்கு வர்த்தகம் இன்னமும் திரும்பவில்லை என்பது திரு ராஜுவின் கவலை. "ஒரு நாளைக்கு 10 வாடிக்கையாளர்கள் வந்தால்கூட அது பெரிய விஷயம் எனக் கருதுகிறேன்," என்று அவர் சொன்னார்.
"காய்கறிகளின் வரத்தை நாங்கள் குறைக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் நட்டம் ஏற்படும். முன்புபோல வாடிக்கையாளர்கள் வரவில்லை என்றால் இன்னும் எத்தனை நாட்களுக்கு வியாபாரத்தை நடத்த முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
முன்னதாக வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோர் சென்ற கேலாங் பகுதிக்குச் சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு, அங்குள்ள கடைக்காரர்களிடம் இருந்து நிலவரத்தைக் கேட்டறிந்தது. "தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் அடைந்திருப்பதால் அந்தப் பிரிவினரின் வருகையை இழந்துவிட்டோம். வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டதால் கடை திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்துவிட்டோம்," என்று கஞ்சிக் கடை நடத்தும் திருவாட்டி டோங், 68, கூறினார். முன்பிருந்ததுபோல வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்குமா என்ற கேள்வி பல கடைக்காரர்களிடம் எழுந்தது.

