சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் திரு லியூ மன் லியோங்கிடமிருந்தும் அவரது குடும்பத்திடமிருந்தும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்தோனீசியப் பணிப்பெண் பார்த்தி லியானி குற்றமற்றவர் என்று அண்மையில் உயர்
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதன்முதலில் போலிசார் நடத்திய விசாரணையில் ஏற்பட்ட குளறுபடிகளை அடையாளம் காண அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பர் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
“விசாரணை மற்றும் வழக்கு நடத்தப்பட்ட விதத்தில் எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது. அதைக் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்,” என்று திரு சண்முகம் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துகளை அதிகாரிகள் மிகக் கடுமையாகக் கருதுவதாக அவர் கூறினார்.
இருப்பினும், விசாரணையில் எத்தகைய குளறுபடிகள் நடந்திருக்கக்கூடும் என்பது குறித்து எவ்வித ஆதாரமும் இன்றி முடிவெடுக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் திரு சண்முகம் கேட்டுக்கொண்டார். அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையின் முடிவுக்கு காத்திருக்கும்படி அவர் கூறினார்.
குளறுபடிகளை அடையாளம் காண நடத்தப்படும் விசாரணையைப் பற்றி அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவித்தார்.
“தற்காப்பு மனப்பான்மையுடன் விசாரணையை நடத்தக்கூடாது. வேண்டுமென்றே குறை கண்டுபிடிக்கும் நோக்கிலும் இருக்கக்கூடாது. நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ன நடந்தது, ஏன் அவ்வாறு நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். விசாரணை நடந்து முடிந்த பிறகு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று திரு சண்முகம் தெரிவித்தார். அடித்தள அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டபோது, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் திரு
சண்முகம் பேசினார். பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
திரு லியூவுக்கும் பணிப்பெண்ணான 46 வயது திருவாட்டி பார்த்தி லியானிக்கும் உள்ள அந்துஸ்து வேறுபாடு காரணமாக முதன்முதலாக நடத்தப்பட்ட வழக்கு நியாயமான முறையில் நடத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த திரு சண்முகம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் நியாயம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். நீதித்துறை பாரபட்சமற்றது என்றும் நியாயமானது என்றும் அந்துஸ்து, பதவி ஆகியவற்றை அது பார்ப்பதில்லை என்றும் அமைச்சர் சண்முகம் கூறினார்.
திருவாட்டி பார்த்தி லியானியின் சார்பில் இலவசமாக வாதாடிய வழக்கறிஞர் திரு அனில் பால்சந்தானியை திரு சண்முகம் பாராட்டினார். தமது கட்சிக்காரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சீரற்ற ஆதாரங்களை திரு பால்சந்தானி நீதிமன்றத்திடம் மேற்கோள்காட்டியது தொடர்பாக தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக திரு சண்முகம் கூறினார்.
வழக்கு தொடர்பான சிறு சிறு அம்சங்களுக்கும் திரு பால்சந்தானி முக்கியத்துவம் கொடுத்து தெளிவாக வாதாடி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டதாக அவர் கூறினார்.