வசதி குறைந்தோர், வெளிநாட்டு ஊழியர்கள் நலனுக்கு $1.3 மி. நன்கொடை

வசதி குறைந்தோர், வெளிநாட்டு ஊழியர்கள் நலனுக்கு $1.3 மி. நன்கொடை

3 mins read
a6f38a0d-5304-4e53-8bad-04d0ec8e9ecd
பேரிங் பிரைவெட் எக்விட்டி ஏஷியா நிறுவனம், சிங்கப்பூர் சமூக அறநிறுவனத்திற்கு $600,000 நன்கொடை வழங்கியது. மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் (இடமிருந்து மூன்றாவது) முன்னிலையில் காசோலை வழங்கப்பட்டது. படம்: பேரிங் பிரைவெட் எக்விட்டி ஏஷியா -

வசதி குறைந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கைகொடுக்கும் உள்ளூர் நிவாரணத் திட்டங்களுக்காக புதிதாக $1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்ப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிட வசதி, உணவுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கவனிக்கும் பல்வேறு ஆதரவுத் திட்டங்களுக்கும் வசதி குறைந்த 2,000 உள்ளூர் குடும்பங்களுக்கும் இந்நிதி ஒதுக்கப்படும்.

தனியார் பங்கு நிறுவனமான 'பேரிங் பிரைவெட் எக்விட்டி ஏஷியா' (பிபிஇஏ) மொத்தமாக $1 மில்லியன் நிதியை நன்கொடையாகக் கொடுத்துள்ளது.

அந்த நிறுவனம் $600,000 நன்கொடையை சிங்கப்பூர் சமூக அறநிறுவனத்திற்கு வழங்கியது.

அந்த தொகை செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் வழங்கப்பட்டது.

மேலும், நேற்று நடந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பிபிஇஏ நிறுவனம் $400,000ஐ வெளிநாட்டு ஊழியர் நிலைய அறநிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர் உதவி நிதிக்கு வழங்கியது.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி.குமரன் உள்ளிட்டோர் நேற்று பிற்பகல் 'ஸூம்' காணொளிக் காட்சி வழியாக நடைபெற்ற சந்திப்பின்போது நிவாரணத் திட்டங்களுக்கான காசோலைகள் மின்னிலக்க வடிவில் வழங்கப்பட்டன.

நிதியுதவிக்கான இந்தப் பங்காளித்துவ முயற்சியில் பிபிஇஏ நிறுவனத்துடன் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) சிங்கப்பூர் சமூக அறநிறுவனமும் இணைந்திருக்கின்றன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான $400,000 நன்கொடைக்கு மேலாக, வெளிநாட்டு ஊழியர் நிலைய அறநிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர் உதவி நிதிக்கு $326,476 தொகையை சிண்டா வழங்கியது.

'சிண்டா கேர்ஸ்' என்ற நிதி திரட்டு இயக்கத்தின்கீழ் இந்திய வர்த்தகத் தலைவர்களின் வட்ட மேசை, சிஐஐ இந்திய வர்த்தகக் கருத்தரங்கு, சியூ ஹாவ் டெக் அறநிறுவனம், சிண்டாவின் அறங்காவலர்களில் ஒருவரான திரு மற்றும் திருமதி சத்பால் கத்தார் உள்ளிட்டோர் பெரும் நன்கொடைகளை வழங்கியதாக சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி இந்தச் சந்திப்பின்போது கூறினார்.

"ஆயினும், இந்தத் தொகையில் $10, $50 மற்றும் $100 வழங்கிய எண்ணற்றோரின் பங்களிப்பும் உள்ளது. சமூகத்தின் இதயமாக இயங்கும் இவர்களது நன்கொடைக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்," என்று அமைச்சர் கூறினார்.

திரட்டப்பட்டுள்ள இந்தத் தொகையின் ஒவ்வொரு வெள்ளிக்கும் அரசாங்கம் மூன்று வெள்ளியை வழங்கும் என்பதையும் குமாரி இந்திராணி தெரிவித்தார்.

சிண்டாவின் நிதி திரட்டும் முயற்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த நிதி திரட்டு முயற்சியை ஒருங்கிணைத்த சிண்டாவுக்கு நன்றி கூறிய திரு இங் சீ மெங், வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் முயற்சியில் இந்தியத் தூதரகம் என்டியுசியுடன் சேர்ந்து பணியாற்றியதைச் சுட்டினார்.

"கொடையாளிகளான நீங்கள் வழங்கும் ஒவ்வொரு வெள்ளியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு மட்டுமின்றி பல் துலக்கி, சவரக் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க பயன்படும்," என்றார் திரு இங்.

சிங்கப்பூர் சமூக அறநிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள $600,000 நிதி, கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டு உள்ள ஃபெய் யுவே மற்றும் சவுத் சென்ட்ரல் குடும்பச் சேவை நிலையங்களைச் சேர்ந்த 2,000 வசதி குறைந்த குடும்பங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.

இதுவரையில் அந்த அறநிறுவனம் திரட்டியுள்ள $8 மில்லியனுக்கு மேலான நிதி, 270க்கும் மேற்பட்ட அறநிறுவனங்களுக்கும் 136,000 பேருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

கிருமிப் பரவல் சூழலில் வேலையின்மையால் சமூகத்தில் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவோருக்கு உதவ கடப்பாடு கொண்டு உள்ள பிபிஇஏ நிறுவனத்தின் முயற்சிகளுக்கு சிண்டா உள்ளிட்ட பல அமைப்புகளும் ஆற்றிய பங்களிப்புக்காக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜீன் எரிக் சலடார் நன்றி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்