சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 48 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 57, 454ஆக உயர்ந்துள்ளது.
புதிய நோயாளிகளில் ஐவருக்கு கிருமித்தொற்று வெளிநாட்டில் ஏற்பட்டது. சிங்கப்பூருக்கு வந்துள்ள இவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூக அளவில் எவரும் இன்று புதிதாக பாதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று சுகாதார அமைச்சு 49 புதிய சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கையினரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.
விடுதிகளுக்கு வெளியே தங்கும் புதிய நோயாளிகளில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர். எட்டுப் பேர் வெளிநாட்டில் இந்நோயைத் தொற்றி இங்கு வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த ஒருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் 42 வயது வெளிநாட்டு ஊழியர் என்றது அமைச்சு. எந்த அறிகுறிகளும் காணப்படாத நிலையில் இருந்த அவருக்கு எப்படி இந்நோய் தொற்றியது என்பது இன்னமும் அறியப்படவில்லை.