குமாரி பார்த்தி லியானி என்ற முன்னாள் பணிப்பெண் வழக்கு தொடர்பில் நாடாளுமன்றத்தில் அமைச்சுநிலை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யப்போவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் புதன் கிழமை தெரிவித்தார்.
அந்தப் பணிப்பெண் திருட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். உள்துறைக் குழு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் விவாதிப்பது நல்லதாக இருக்கும் என்று கூறினார்.
நாடாளுமன்றம் அடுத்த மாதம் கூடுகிறது. அப்போது இந்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக தாங்கள் பல கேள்விகளையும் ஒத்திவைப்புத் தீர்மானத்தையும் தாக்கல் செய்து இருப்பதாக பாட்டாளிக் கட்சி உறுப்பினர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெரிவித்து உள்ளனர்.
இதனை அடுத்து அமைச்சரின் தகவல் இடம்பெற்றது. குமாரி பார்த்தி லியானி மொத்தம் $34,000 மதிப்புள்ள தங்கள் பொருட்களைத் திருடிவிட்டதாக பிரபல தொழிலதிபரான லியூ மன் லியோங்கின் குடும்பம் குற்றம் சுமத்தியது.
அவர்கள் புகாரின் பேரில் தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்கில் தீர்ப்பு பணிப்பெண்ணுக்குச் சாதகமாக அமைந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. வசதி குறைந்த மக்களை நீதித் துறை சரிசமமாக நடத்தவில்லையோ என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் சண்முகம், என்ன நடந்தது என்பதை எல்லாம் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு கேள்விகளுக்குப் பதில் அளிப்பது நல்லதாக இருக்கும் என்றார்.
அமைச்சர் கருத்து கூறியதற்கு முன்னதாக எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
குற்றவியல் நீதி முறையில் சமத்துவப் பிரச்சினை பற்றி பேசுவதற்காக அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் திருவாட்டி சில்வியா லிம், ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்து இருப்பதாக அது தெரிவித்தது.
ஜாலான் புசார் குழுத் தொகுதி உறுப்பினர் டெனிஸ் புவாவும் உடற்குறையுள்ளவர்கள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்து இருக்கிறார் என்பதால் அடுத்த கூட்டத்தில் யாருக்குப் பேச வாய்ப்பு கிடைக்கும் என்பது சீட்டுக் குலுக்கு மூலம் முடிவாகும்.