மனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை

மனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை

3 mins read
831694de-5b6b-4c3c-b4eb-b75ec32aa0f1
இடது படம்: அதிகாரிகளுடன் கிருஷ்ணன் ராஜு (நடுவில்). வலது படம்: கொலை செய்யப்பட்ட ரெத்தினா வைத்தின சாமி. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக் -
multi-img1 of 2

தம்முடன் 28 ஆண்டுகளாக வாழ்ந்த தம் மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்று சந்தேகப்பட்டு, அவரைக் கத்தியால் குத்தி கொன்ற கணவருக்கு இன்று உயர் நீதிமன்றம் பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கிருஷ்ணன் ராஜு என்ற அந்த 53 வயது முன்னாள் பேருந்து ஓட்டுநர், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி இரவு தாங்கள் வசித்த லோயாங் கார்டன்ஸ் கூட்டுறவு அடுக்குமாடி கட்டடத்தில் தமது 44 வயது மனைவியான திருவாட்டி ரத்தினா வைத்தின சாமியை கொலை செய்தார்.

அதன் காரணமாக கிருஷ்ணன் மீது நோக்கமற்ற மரணம் விளைவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

நெஞ்சுப் பகுதியில் ஐந்து ஆழமான கத்திக் குத்துகள் உட்பட மொத்தம் 13 கத்தித் குத்துக் காயங்களால் மரணமடைந்த திருவாட்டி ரத்தினாவை கொன்ற கிருஷ்ணன் மீது முன்னதாக கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

பின்னர் மனநலக் கழகத்தின் பரிசோதனையில் கிருஷ்ணனுக்கு மனநலப் பிரச்சினை இருப்பதால் அவரால் சிந்தித்து செயல்பட முடியாது என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டதால், அவரது கொலைக் குற்றம் நோக்கமற்ற மரணம் விளைவித்ததாகக் குறைக்கப்பட்டது.

தமது மனைவி தம்மிடம் உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்ற சிந்தனை கிருஷ்ணனின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டதால், கொலை சம்பவம் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன் அவர் கடுமையாகக் குடிக்க ஆரம்பித்தார்.

தீர்ப்பளித்த நீதிபதி ஹூ ஷியு பெங், மனைவி மீதான தாக்குதல் பெரும்பாலும் தூண்டப்பட்டது இல்லை என்றாலும் அது திட்டமிடப்பட்ட செயல் அல்ல என்றார்.

தமது மனைவி தம் கள்ளக்காதலன் எனத் தாம் நம்பிய ஒருவருடன் பேசிய உரையாடலின் ஒலிப்பதிவைக் கேட்டதால், தமது சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டதாக எண்ணிய கிருஷ்ணன், அவரைத் தாக்க முடிவெடுத்தார் என்றும் நீதிபதி கூறினார்.

மது போதைக்கு அடிமையானதும் மனைவியைத் தாக்கிய பிறகு, உதவி நாடாததும் அவரது குற்றத்தை மேலும் கடுமையாக்கியது என்று கூறிய நீதிபதி தமது செயலுக்கு மிகவும் வருந்திய கிருஷ்ணன் சம்பவம் நடந்த அடுத்த நாளே போலிசிடம் சரணடைந்தார் என்றும் விவரித்தார்.

செயல்பாட்டு நிர்வாகியாக வேலை செய்த திருவாட்டி ரத்தினா மீது கிருஷ்ணன் அதிக உரிமை கொண்டாடி வந்தார் என்றும் மனைவியை அதிகம் கண்காணித்து வந்தார் என்றும் 22, 20 வயதுகளில் உள்ள அவர்களின் பிள்ளைகள் கவனித்து வந்தனர் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

தம்பதி இருவரின் உறவில் 2016 டிசம்பரிலிருந்து விரிசல் ஏற்படத் தொடங்கியது. தம் மீது உள்ள கவனம் மற்றொரு பக்கம் திசை திரும்பியுள்ளது என்று கிருஷ்ணன் சந்தேகப்பட்டார். ரத்தினா, அவரிடமிருந்து மணவிலக்கு கோரினார்.

கொலை நடந்த இரவன்று மனைவி, ஒருவருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த உரையாடலைக் கேட்ட கிருஷ்ணன், அவர் 'சரவணன்' என்று உச்சரித்த பெயரைக் கேட்டார். அதைத் தொடர்ந்து மது அருந்தினார். தம்மைப் பற்றிதான் உரையாடலில் மனைவி கூறி சிரித்தார் என்று எண்ணிய கிருஷ்ணன், மனைவியின் கள்ளக் காதலன்தான் 'சரவணன்' என்று முடிவு செய்தார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய ரத்தினா குளியலறைக்குச் சென்றபோது, கிருஷ்ணனும் குளியலறைக்குள் புகுந்த தம் மனைவியைக் கத்தியால் குத்தினார். பின்னர் அங்கிருந்த அவரை இழுத்து வந்து உரையாடல் ஒலிப்பதிவைக் கேட்கச் சொன்னார்.

தம்மை விட்டுவிடும்படி கணவரிடம் மன்றாடிய ரத்தினாவை அவர் அசையுற்று கிடைக்கும் நிலை வரும் வரை சரமாரியாகக் கத்தியால் தொடர்ந்து குத்தினார். பின்னர் வீட்டை விட்டு புறப்பட்டு ஜோகூர் பாருவில் உள்ள தமது சகோதரர் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணன். அவரது மகளும் மற்றொரு உறவினரும் ரத்தினாவின் உடலை அவரது அறையில் நள்ளிரவு வாக்கில் பார்த்தனர். அடுத்த நாள் சிங்கப்பூருக்குத் திரும்பிய கிருஷ்ணன், போலிசில் சரணடைந்தார்.

திருவாட்டி ரத்தினாவுக்கு அவருடன் வேலை செய்த ஆடவர் ஒருவருடன் 2016 நவம்பரிலிருந்து கள்ள உறவு இருந்தது என்றும் ஆனால் அது பற்றி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ நண்பர்களுக்கோ தெரியாது என்று பின்னர் போலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கிருஷ்ணனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. அவரது தற்காப்பு வழக்கறிஞர் திரு காளிதாஸ் முருகையன் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரினார்.

குறிப்புச் சொற்கள்