அசுத்தமான அறைகள், சேதமுற்ற கழிவறை
அறைகள் அருவருக்கத்தக்க நிலையில் வைத்திருந்த குற்றத்திற்காக வெளிநாட்டு ஊழியர் விடுதிகளை நடத்தும் நிறுவனத்துக்கு நேற்று நீதிமன்றத்தில் $118,000 அபராதம் விதிக்கப்பட்டது. லேபர்டெல் மேனேஜ்மண்ட் கார்ப்பரேஷன் என்னும் அந்த நிறுவனம் நடத்தும் விடுதிகளில் நான்கை அதிகாரிகள் சோதித்தபோது அவற்றின் நிலை மோசமாக இருந்தது கண்டறியப்பட்டது.
2018, 2019ஆம் ஆண்டுகளில் சோதனை நடைபெற்றபோது இரு வசிப்பிடங்களில் பிரச்சினைகள் இருந்ததும் தெரிய வந்தது. சேதமடைந்த விளக்குகள், பழுதடைந்த பாதுகாப்புப் பெட்டிகள், சேதமடைந்த கழிவறைக் கோப்பை ஆகியவற்றை அதிகாரிகள் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்த பர்விஸ் அகம்மது முகம்மது கெளவுஸ், 43, என்பவருக்கு நேற்று $59,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 195 நாட்கள் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டியதிருக்கும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறுவன அதிகாரிகளுள் ஒருவரான ஷேக் முகம்மது முகம்மது அப்துல் ஜலீல், 34, என்பவருக்கு $22,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் அவருக்கு 73 நாட்கள் சிறைத் தண்டனை கிடைக்கும்.
சொத்து மற்றும் தளவாட நிறுவனமான எம்இஎஸ் குழுமத்தின் ஓர் அங்கம்தான் இந்த லேபர்டெல் மேனேஜ்மண்ட் கார்ப்பரேஷன். அபராதம் விதிக்கப்பட்ட இரு சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் நடப்புக்கு வந்த இச்சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படும் முதலாமவர்கள் இவர்கள்.
ஜூரோங் பெஞ்சுரு தங்கும்விடுதி 1ல் 2018 மே மாதம் சோதனை நடத்தப்பட்டபோது அங்கிருந்த 27 அறைகள் அருவருத்தக்க நிலையில் காணப்பட்டன. பிசுபிசுப்பான சமையல் அறைகளும் அதில் அடங்கும். இதேபோன்ற பிரச்சினைகள் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் கடந்த ஆண்டிலும் சோதனை யிடப்பட்ட இதர மூன்று தங்கும் விடுதிகளிலும் காணப்பட்டன.
கியன் டெக் லேனிலுள்ள புளூ ஸ்டார்ஸ் தங்கும் விடுதி, காக்கி புக்கிட் ரோடு 3ல் உள்ள த லியோ தங்கும் விடுதி ஆகியவற்றிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
பர்விஸ், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. ஜூரோங் பெஞ்சுரு தங்கும் விடுதிகள் 1, 2 ஆகியவற்றையும் புளூ ஸ்டார்ஸ் தங்கும் விடுதியையும் அன்றாடம் சென்று மேற்பார்வையிடும் பொறுப்பில் அப்போது அவர் இருந்தார்.
இதர மூன்று தங்கும் விடுதிகளின் மனிதவளம், பாதுகாப்பு, துப்புரவு, பராமரிப்பு மற்றம் சாதனங்கள் கொள்முதல் ஆகியவற்றுக்கும் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
அதேபோல லேபர்டெல் நிறுவனத்துக்கும் ஜூரோங் பெஞ்சுரு விடுதி 1ல் தங்கும் வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகளுக்கும் இடையிலான வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொறுப்பில் ஷேக் இருந்தார். விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை தொடர்பில் உரிம நிபந்தனைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2018 மார்ச் 31ல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சோதனையிட்டபோது விடுதியின் இரு பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோர் இருந்ததைக் கண்டனர். 252 பேருக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் 268 பேர் இருந்தது அப்போது தெரிய வந்தது.