இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நேற்று அபுதாபியில் தொடங்கின.
இந்தச் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர்களான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை முடிவடைந்த 20 ஓவர் ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியைக் கைப்பற்றியது.
சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்குப் பிறகு சென்னை அணி வாகை சூடிய முதல் வெற்றி இதுவாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் இந்த ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
கொவிட்-19 கிருமிப் பரவல் அச்சத்தால் போட்டி இடம்பெற்ற அரங்கில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைவருமே தொலைகாட்சி வழியாகப் பார்க்கவேண்டிய சூழலில் அரங்கம் வெற்றிடம்போல காட்சியளித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இருப்பினும் விளையாட்டாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அரங்கில் இருந்த காணொளித் திரையில் ரசிகர்களின் கரகோஷமும் நடனங்களும் முக்கிய தருணங்களில் ஒலிபரப்பப்பட்டன.
அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தப்பின் முதன் முறையாக டோனி நேற்றைய போட்டியில் களமிறங்கினார். கிட்டத்தட்ட 436 நாட்களுக்குப் பிறகு டோனி மீண்டும் விளையாடினார். விக்கெட் கீப்பராக இரண்டு கேட்ச்களைப் பிடித்த அவர், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 250 பேரை ஆட்டமிழக்கச்செய்யவைத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்தப்பட்டியலில் 238-விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் இரண்டாவது இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் 214-பேரை ஆட்டமிழக்கச்செய்து 3-வது இடத்திலும் உள்ளனர்.