பல ஆண்டுகளாக வெளிப்படுத்தப்பட்ட அனைவரது ஒருமித்த ஒத்துழைப்பின் காரணமாக சிங்கப்பூர் சமூகத்தில் கல்வி, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம், பொருளியலில் பங்களிப்பு ஆகிய அம்சங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
“இதர முயற்சிகளின் வழி பெண்களை அதிகம் பாதித்த அம்சங்களில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
“உதாரணத்துக்கு, பாலியல் செயல்களைப் பார்த்து இன்பம் அடைதலை உள்ளடக்கிய தண்டனைச் சட்டத்தில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், குடும்ப வன்முறை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க இந்த ஆண்டு அமைக்கப்பட்ட அமைப்புகளுக்கிடையிலான பணிக்குழு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
“இருப்பினும், பெண்கள் தொடர்பில் மேலும் மேம்பாடு காணவேண்டிய சில விவகாரங்கள் உள்ளன. அவற்றில் சில பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மற்றவை இன்னும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன,” என்றும் திரு சண்முகம் விளக்கினார்.
‘பெண்கள் மேம்பாட்டு கலந்துரையாடல்கள்’ எனும் தலைப்பில் இன்று நடைபெற்ற மெய்நிகர் கலந்துரையாடலில் அமைச்சர் சண்முகம் பங்கேற்று முக்கிய உரை ஆற்றினார்.
“இல்லத்தில், பள்ளிகளில், வேலையிடங்களில், சமூகத்தில் பெண்களைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய கருத்துகள் சேகரிக்கப்படும்.
“பாலின சமத்துவமின்மை தொடர்பான விவகாரங்கள் பற்றிய விரிவான மறுஆய்வு நடத்தப்பட்ட பிறகு அது தொடர்பான வெள்ளை அறிக்கை அடுத்த ஆண்டு முற்பாதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்,” என்றும் திரு சண்முகம் கூறினார்.
“1961ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாதர் சாசனத்தைத் தவிர, பெண்களின் நலன்களைப் பாதுகாக்கும் புதிய சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
“சட்ட, உள்துறை அமைச்சர் என்ற முறையில் இது எனது முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. குற்றவியல் சட்ட செயல்முறைகளின்போது பாதிக்கப்பட்டவர்களின் அதிர்ச்சியைக் குறைக்க 2018ல் அறிமுகமான குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான திருமணத் தடைக் காப்பைத் திரும்பப் பெறுதலை உள்ளடக்கி, கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தண்டனைச் சட்டத்தில் மாற்றங்கள்,” ஆகியவற்றைக் குறிப்பிடலாம் என்றார் அமைச்சர்.
இந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத் திருத்தங்களால், பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தல், பின் தொடர்தல், இணையத் தொந்தரவு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது சாத்தியமானது.
“பெண்கள் புகார் கொடுக்கும் மற்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்தும் முறையும் எளிதாக்கப்பட்டது. அதற்காக ‘ஒன்சேஃப் சென்டர்’ எனும் நிலையம் போலிசால் அமைக்கப்பட்டது.
“அதன் மூலம் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பாதிக்கப்பட்டவர்கள் தடயவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு மிகவும் ரகசியமான ஓர் இடத்திற்கு செல்ல வழி வகுக்கும்.
“கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங், உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஃபைசால் இப்ராஹிம் இருவரும் தலைமையேற்கும் குடும்ப வன்முறைக்கு எதிரான பணிக்குழு இவ்வாண்டு முற்பகுதியில் தொடங்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வை முடித்து, அடுத்த ஆண்டில் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.
“மருத்துவம், சட்டம், கணக்கியல், நிதி, பொருளியலில் சில அம்சங்கள் ஆகியவற்றில் பெண்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவற்றில் அவர்களின் பங்களிப்பை மேலும் சிறப்பாக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன,” என்றும் அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.