மலாக்கா நீரிணையில் 80 மீட்டர் ஆழத்தில் சிதைந்து கிடக்கும் நீர்மூழ்கிக்கப்பலை நான்கு முக்குளிப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அது 77 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் போர் விமானங்களால் தாக்கப்பட்டு மூழ்கிய அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான புஎஸ்எஸ் கிரேனேடியராக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தாய்லாந்தின் கடலோர நகரமான புக்கெட்டுக்குத் தெற்கே 145 கிலோ மீட்டர் தூரத்தில் நீர்மூழ்கிக்கப்பல் கண்டெடுக்கப்பட்டது.
கடலுக்கு அடியில் இருக்கம் அந்த நீர்மூழ்கிக்கப்பல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நான்கு முக்குளிப்பாளர்களின் கண்களில் பட்டது.
அதையடுத்து, அவர்கள் நால்வரும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அக்கடற்பகுதியில் ஆறு முறை முக்குளித்து நீர்மூழ்கிக்கப்பலை ஆராய்ந்து அதன் அடையாளத்தை உறுதி செய்ய தீவிரமாகச் செயல்பட்டனர்.
தேசிய பழஞ்சுவடிக் காப்பகம் மற்றும் பதிவுகள் நிர்வாகத்தில் உள்ள தொழில்நுட்பப் படங்களை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு யுஎஸ்எஸ் கிரேனேடியரைக் கண்டுபிடித்துவிட்டதாக நால்வரும் நம்புகின்றனர்.
நீர்மூழ்கிக்கப்பலின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு தமது குழு $203,000 செலவு செய்ததாக முக்குளிப்பாளர்களில் ஒருவரான திரு லேன்ஸ்ரீ் ஹொரோவிட்ஸ் கூறினார்.
இனி கடற்படை வரலாற்று மற்றும் மரபுடைமை தளபத்தியம் நீர்மூழ்கிக்கப்பலின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். அதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
கடலுக்கு அடியில் கிடக்கும் நீர்மூழ்கிக்கப்பல் அமெரிக்க கடற்
படைக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டால் அக்கடற்
பகுதிக்கு மூழ்கிய ராணுவக் கப்பல் சட்டத்தின்கீழ் சட்டரீதியாகப் பாதுகாப்பு வழங்கப்படும்.
1943ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று ஜப்பானியப் போர் விமானங்களைக் குறிவைத்து யுஎஸ்எஸ் கிரேனேடியர் தாக்குதல் நடத்தியது.
ஆனால் ஜப்பானியப் போர் விமானம் ஒன்று வீசிய குண்டில் அது சேதமடைந்தது. நீர்மூழ்கிக்கப்பலில் இருந்த 76 கடலோடிகளும் உயிர் தப்பினர். அவர்களை ஜப்பானியக் கப்பல் ஒன்று ஏற்றிக்கொண்டது. கடலோடிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் நால்வர் உயிரிழந்ததாகவும் உயிர்தப்பிய கடலோடியான திரு ராபர்ட் பால்மர் தாம் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நீர்மூழ்கிக்கப்பல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, யுஎஸ்எஸ் கிரேனேடியரின் கடலோடிகளுடைய குடும்பத்தார் தம்முடன் தொடர்புகொண்டதாக திரு ஹொரோவிட்ஸ் தெரிவித்தார்.