இங்குள்ள பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புதிய கவலை ஒன்று வாட்டத் தொடங்கியுள்ளது. உள்ளூர் பட்டதாரிகளுக்கே வேலை கிடைப்பது சிரமமாக உள்ள நிலையில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அது பெரும் சவாலாக மாறியுள்ளது.
கல்வி அமைச்சின் துணைப்பாட மானியத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள், சிங்கப்பூரில் பதிவான ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பட்டம் பெற்றவுடன் வேலை செய்வது கட்டாயம். ஆனால் வேலை அனுமதி அட்டை கொண்ட வெளிநாட்டவருக்கான குறைந்தபட்ச சம்பள வரம்பை அரசாங்கம் உயர்த்தியது முதல் சிங்கப்பூரர்களைக் கொண்ட ஊழியரணியை நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வலியுறுத்தல் வரை இந்த வெளிநாட்டு பட்டதாரிகளின் கவலை பலமடங்காகியுள்ளது.
ஓராண்டுக்குப் பின்னரும் வேலை இல்லாமல் இருந்தால் $100,000 வரையிலான பிணைத் தொகையைத் திரும்ப கட்ட வேண்டியிருக்கும் என்ற கவலையும் சிலருக்கு. வேலையில்லாமல் சிங்கப்பூரிலேயே தங்கி இருந்தாலும் கூடுதல் நிதி பாரம்.
‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகையிடம் பேசிய வெளிநாட்டு மாணவர்களில் பத்தில் அறுவருக்கு கடந்த நான்கு மாதங்களில் வேலை வாய்ப்பு எதுவும் அமையவில்லை என்று தெரிவித்தனர்.
வேலை கிடைத்தபோதும் அது கிடைத்த வழி சுலபமல்ல என்றும் சிலர் கூறினர். பலமுறை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன மற்றும் நிறுவனங்கள் அவர்கள் சார்பில் மனிதவள அமைச்சிடம் மேல்முறையீடு செய்தன. இதன் பின்னரே ஒரு சிலருக்கு வேலை அமைந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் வெளிநாட்டவருக்கு எதிரான உணர்வுகளும் சிங்கப்பூரர்களிடையே இருப்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பதாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.