கொவிட்-19 நெருக்கடி காரணமாக வேலை இழந்த அல்லது குறிப்பிடத்தக்க அளவு வருமானம் இழந்த சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட மானியம் இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அதற்கான தகுதி நிபந்தனைகளும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதத்தில் இருந்து, கொவிட்-19 ஆதரவு மானியம் கோரி விண்ணப்பிப்போர் ஒரு வீட்டிற்கு மேல் வைத்திருக்கக்கூடாது. வருமானம் ஈட்ட குறைந்த வழிவகையே உள்ளோருக்கு ஆதரவு கிட்டுவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த மாற்றம் இடம்பெறுவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரிவித்தது.
அத்துடன், ஆதரவு மானியம் கோரி விண்ணப்பிக்கும் வேலை இல்லாத அனைவரும் தங்களது வேலை தேடல் அல்லது பயிற்சி தொடர்பான முயற்சிகளை மெய்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
கொரோனா பரவல் பொருளியலில் ஏற்படுத்திய தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேலை தொடர்பான திறன்களையும் தேர்ச்சிகளையும் பெறவும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் அரசாங்கத்தின் ‘எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத் திட்டம்’ உதவுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
“அம்முயற்சிகளுக்கு இணங்க, முதல் முறையாக அல்லது இரண்டாம் முறையாக ஆதரவு மானியம் கோரி விண்ணப்பிக்கும் வேலை இல்லாதவர்கள், மானியத்திற்குத் தகுதிபெறுவதற்கு வேலை தேடிக்கொள்ள அல்லது பயிற்சிக்காகத் தாங்கள் முயற்சி எடுத்து வருவதை நிரூபிக்க வேண்டும்,” என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
வேலையிழந்த, தன்விருப்பம் இன்றி ஊதியமில்லா விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள, நீடித்த காலத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை இழந்துள்ள முழுநேர அல்லது பகுதிநேர சிங்கப்பூர் ஊழியர்களுக்கும் நிரந்தரவாசத் தகுதிகொண்ட ஊழியர்களுக்கும் கொவிட்-19 ஆதரவு மானியமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் $800 வரை வழங்கப்படும்.
இவ்வாண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இம்மாதத்துடன் முடிவடைவதாக இருந்தது.
ஆனால், இந்த ஆதரவு மானியம் இவ்வாண்டு டிசம்பர் இறுதி வரைக்கும் நீட்டிக்கப்படும் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கடந்த மாதம் அறிவித்தார்.
அதுவரை, 60,000க்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு $90 மில்லியனுக்கு மேல் கொவிட்-19 ஆதரவு மானியமாக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “இப்போதைய தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் முதல்முறை விண்ணப்பதாரர்கள் ஆதரவு மானியம் கோரி இம்மாதம் 30ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். திருத்தப்பட்ட தகுதி நிபந்தனைகள் அக்டோபர் 1ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து நடப்பிற்கு வரும்,” என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
ஏற்கெனவே கொவிட்-19 ஆதரவு மானியத்தை முழுமையாகப் பெற்றவர்கள் அல்லது அதைப் பெறுவது இதுதான் கடைசி மாதம் எனில், அவர்கள் மேலும் மூன்று மாதங்களுக்கு அதை நீட்டிக்கக் கோரி அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
ஆதரவு மானியம் வேண்டுவோர் https://msf-csg.gov.sg/preinstruction/csg என்ற இணையப்பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம்.