தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

2 mins read
b0b48bcc-789f-4135-94ef-f787a0288479
படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 3

கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 74.

திரு பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது மகன் சரண், "எஸ்பிபி அனைவருக்கும் சொந்தமானவர். இனி அவரது பாடல்களில் மட்டுமே அவர் வாழ்வார். எனது தந்தை இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்," என்று தெரிவித்தார்.

'எஸ்பிபி' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீபதி பண்டிதராதையுலா பாலசுப்ரமணியம்தனது காந்தக் குரலால் கோடானுகோடி ரசிகர்களைக் கவந்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் திரைப்பாடல்கள் பாடிய அவர், பல திரைப்படங்களில் தேர்ந்த நடிகராகவும் மிளிர்ந்தார்.

இந்திய இசைக்கு அளவிடமுடியா பங்களிப்பை நல்கிய அவர் 40,000க்கு அதிகமான பாடல்களைப் பாடி, கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தார்.

கேளடி கண்மணி, சிகரம், திருடா திருடா, காதலன், உல்லாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தினார் திரு எஸ்பிபி.

50 ஆண்டு கால இசைப் பயணத்தில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஆறு தேசிய திரைப்பட விருதுகள், 25 நந்தி விருதுகள் பெற்ற அவருக்கு 2001ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதும் 2011ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் வழங்கி இந்திய அரசு அவரை கௌரவித்தது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், திரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி, எக்மோ கருவி ஆகியவற்றுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

தகவல் அறிந்து நேற்று கமல்ஹாசன் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் திரு பாலசுப்ரமணியத்தின் உடல் நலம் விசாரித்தார்.

இன்று காலை தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தனர்.

அவரது குடும்பத்தினரும் மருத்துவமனையில் அவரைப் பார்க்கக் கூடினர்.

அவரது மரணச் செய்தி அறிந்து அவரது ரசிகர்களும் மருத்துவமனையை நோக்கி படையெடுத்துள்ள நிலையில், போலிசார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.