மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திர மனிதர்கள் செய்து விடுவதால், மனிதர் களின் வேலைகள் பறிக்கப்படுமா அல்லது கணினிகளை மனிதரால் முறியடிக்க முடியுமா போன்ற கவலைகள் மக்களுக்குத் தேவையில்லை.
மாறாக, மனித ஆற்றலில் மக்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
“உதாரணத்துக்கு, இயந்திர மனிதர்களும் கணினிகளும் ஆக்கபூர்வமாக யோசிக்க முடியாது, நேருக்கு நேரான கலந்துரையாடல்களில் பங்கேற்க முடியாது, ஒருவரிடம் எந்த ஒரு விவகாரத்திலோ சவால் விடுக்க முடியாது, எந்த ஒரு பிரச்சினைக்கும் ஒரு குழுவாக தீர்வு காண முடியாது.
“தன்னிச்சையான, சமூக கற்றலையும் எந்தவோர் இயந்திரத்தாலும் மேற்கொள்ள முடியாது,” என்றும் அமைச்சர் விளக்கினார்.
சிங்கப்பூரர்களுக்கான எதிர்கால வேலைகளும் ஆற்றல்களும் எனும் தலைப்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று திரு வோங் பேசினார்.
திரு வோங்குடன், தென்மேற்கு வட்டார மேயர் திருவாட்டி லோ யென் லிங், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் திருவாட்டி டெனிஸ் புவா, வடகிழக்கு வட்டார மேயர் திரு டெஸ்மண்ட் சூ, வடமேற்கு வட்டார மேயர் திரு அலெக்ஸ் யாம், தென்கிழக்கு வட்டார மேயர் திரு ஃபாமி அலிமான் ஆகிய ஐந்து மேயர்களும் உரையாடலில் கலந்து கொண்டனர்.
“நேற்றைய தினத்தைவிட இன்றைய காரியங்களை எவ்வாறு சிறப்பாக செய்யலாம் என்று மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். இன்னும் அதிக அளவில் நிரலிடுதலைக் கற்க வேண்டுமா, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் சிந்திக்கிறார்கள்.
“இவை எல்லாம் முக்கியமான ஆற்றல்கள் என்று நான் கருதுகிறேன். தொழில்நுட்பம் பற்றி நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இயந்திரங்களை நாம் சிறப்பாகக் கையாள முடியும்.
“அதேவேளையில் கணினியைத் தோற்கடிக்கும் இன்னொரு கணினியாக நாம் மாற, இன்னும் அதிகமாக கற்க வேண்டும் என்று சிந்திக்க தேவையில்லை.
“இதற்கு ஒரு வழி நமது மனித வலிமையை இரட்டிப்பாக்கிக்கொள்ள வேண்டும். மனிதனின் ஆற்றல்கள் இயற்கையானவை, உள்ளார்ந்தவை என்றும் அனைவராலும் இதை செய்ய முடியும் என்றும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அதில் இன்னும் அதிக பயிற்சி எடுத்துக்கொண்டு அதில் மேன்மையடைய வேண்டும்,” என்றும் அமைச்சர் வோங் வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய திருவாட்டி டெனிஸ் புவா, “எதிர்காலத்துக்கு நமக்குத் தேவைப்படும் எல்லா ஆற்றல்களும் தொழில்நுட்பம் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. சுகாதாரப் பராமரிப்பு போன்ற மற்ற வேலைகளும் உண்டு. அதன் மூலம், தொழில்நுட்பத்தைத் தொடர்புக் கருவியாகப் பயன்படுத்தி நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள முடியும்,” என்றார்.
அடுத்து பேசிய திரு டெஸ்மண்ட் சூ, “மாற்றங்கள் விரைவில் நிகழ்கின்றன. அதன் அடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டு முன்னேற மக்கள் தயாராக இருக்கின்றனர் என்பதுதான் இங்கு மகிழ்ச்சியான செய்தி,” என்றார்.
மூன்று அமைப்புகள் சேர்ந்து ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்ட சடங்குக்குப் பிறகு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சமூக மேம்பாட்டு மன்றங்களில் சார்பில் மேயர்கள் குழுவின் தலைவர் திருவாட்டி லோ, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி திரு ஓங் சீ சின், வேலை வாய்ப்பு, வேலை நியமனக் கழகத்தின் தலைமை நிர்வாகி திரு கில்பர்ட் டான் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த மூன்று ஆண்டு உடன்பாடு 2023 ஆகஸ்ட் மாதம் வரை, சிங்கப்பூரர்களுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டங்கள் பற்றி தகவல் அளிப்பதுடன் தங்கள் வாழ்க்கைத் தொழில் திட்டமிடலுக்குத் தேவைப்படும் வளங்கள் பற்றியும் வழிகாட்டும்.