சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து 16 வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசை தொடரும்.
அதோடு, வழிபாடுகளில் 250 பேர் வரை பங்கேற்பதற்கான முன்னோட்டத் திட்டம் இடம்பெறும் என கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் இன்று (செப்டம்பர் 26) அறிவித்தார்.
மத்திய சீக்கிய கோயிலுக்கு வருகை புரிந்த அவர், சமய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில் நேரடி இசை ஒரு முக்கிய அங்கம் வகிப்பதைச் சுட்டினார்.
இந்த முன்னோட்டத் திட்டத்தின்கீழ் இசைக் கலைஞர்கள் அல்லது பாடகர்கள் 10 பேர் வரை மேடையில் அனுமதிக்கப்படுவர். ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐவர் முகக்கவசம் அணியாமல் இருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், உட்புறச் சூழலில் பாட்டு நிகழ்ச்சி இடம்பெற்றால், இருவர் மட்டும் முகக்கவசம் அணியாமல் இருக்கலாம்.
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கக்கவசம் அணியாதவர்களுக்கு இடையே இரண்டு மீட்டர் இடைவெளி அவசியம்.
அதுபோக, பாடகர்களுக்கும் வழிபாடுகளில் பங்கேற்பவர்களுக்கும் இடையே குறைந்தது மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
வழிபாடுகளில் ஈடுபடும்போது மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் பாடுவதற்கு அனுமதி கிடையாது.
விரிவான தகவல்களுக்கு தமிழ் முரசின் நாளைய (செப்டம்பர் 27) அச்சுப் பிரதியை நாடுங்கள்!