உலக நாடுகள் இணைந்து கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிக்க வேண்டும் என்றும் அதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு அதிகம் தேவை என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி இருக்கிறார். மாறாக, தன்னைப்பேணித்தனமும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதும் இறுதியில் நம்மை நாமே தோற்கடிக்க வழிவகுத்து விடும் என்று டாக்டர் விவியன் எச்சரித்து இருக்கிறார்.
“அனைத்துத் தரப்பினருக்கும் பாகுபாடின்றி கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டுமெனில் இப்போதைக்கு அனைத்துலக அளவில் அதிக ஒத்துழைப்பு தேவைப்படுகிறது,” என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை காணொளி வழியாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது ஆண்டுக் கூட்டத்தில் பேசியபோது டாக்டர் விவியன் இதனைத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக முதன்முறையாக மெய்நிகர் முறையில் ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.
தமது உரையின்போது, உலகச் சுகாதார நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம், ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆகிய அனைத்துலக அமைப்புகள் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை டாக்டர் விவியன் ஒப்புக்கொண்டார்.
அதே நேரத்தில், தேசியவாதம், இனவெறி, தடையற்ற வர்த்தகத்தையும் உலகளாவிய பொருளியல் ஒருங்கிணைப்பையும் ஏற்க மறுத்தல், தொழில்நுட்பத்தை, விநியோகச் சங்கிலியை இரண்டாகப் பிரித்தல் ஆகியவை பல நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு முரணாக அமைந்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.
இத்தகைய போக்குகள் ஏற்கெனவே இருந்து வந்த நிலையில், கொரோனா பரவல் அதை முடுக்கி, தீவிரப்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“அனைத்துலகப் பயணம் உட்பட சில பழைய இயல்பு வாழ்க்கை நடைமுறைகளை மீண்டும் தொடர முடியும் என நாம் நம்பினால், அதற்கு மருந்துப்பொருள்கள் விநியோகமும் அறிவியல்பூர்வ ஒத்துழைப்பும் எல்லை தாண்டி தொடர வேண்டியதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், தகவல் பரிமாற்றம், தொற்று தொடர்பான நெறிமுறைகளை நாம் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வேண்டும்,” என்றார் டாக்டர் விவியன்.