ஓடும் பேருந்தில் வைத்து பெண் பயணி ஒருவரை அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடத்து நரும் இரவு முழுவதும் கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் நிகழ்ந்து இருக்கிறது.
துணை மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்குள்ளாகி, பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட ‘நிர்பயா’ சம்பவத்தை இது நினைவுபடுத்துவதாக உள்ளது. அண்மைய கொடூரம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்தது. மறுநாள் காலையில் மீரட் நகரில் உள்ள டெல்லி சாலையில் சுயநினைவின்றிக் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சுயநினைவு திரும்பிய பிறகு அவர் தமக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.
அங்குள்ள பைஷாலி பேருந்து நிலையத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஒரு பேருந்தில் அப்பெண் ஏறினார். பயணத்தின்போது அவருக்கு மயக்க மருந்து கலந்த மென்பானம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவரை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் இரவு முழுவதும் மாறி மாறி வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த போலிசார், பின் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தை உறுதிசெய்த மீரட் காவல்துறைக் கண்காணிப்பாளர், சிசிடிவி கருவியில் பதிவான காணொளியைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருவதாகச் சொன்னார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்படி ஓடும் வாகனத்தில் வைத்து பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.