நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரின் கைபேசிகளை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தித் திரையுலகில் போதைப்பொருள்கள் தாராளமாகப் புழங்கி வருவதாகச் சொல்லப்படுவதை அடுத்து நேற்று முன்தினம் அந்த நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, நேற்று முன்தினம் ஷ்ரத்தாகபூரிடம் ஆறு மணி நேரமும் சாரா அலி கானிடம் நான்கரை மணி நேரமும் விசாரணை இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
விசாரணையின்போது நடிகை தீபிகா படுகோன், தம்முடைய மேலாளர் கரிஷ்மா பிரகாஷுடன் முரண்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
“கரிஷ்மா பிரகாஷ், சாரா, தீபிகா, ஷ்ரத்தா ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு கிஷிட்டிஜ் பிரசாத் கைது செய்யப்பட்டார். புதிதாக எந்த அழைப்பாணையும் விடுக்கப்படவில்லை. 18 பேருக்கு மேல் கைது செய்திருக்கிறோம்,” என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் முத்தா அசோக் ஜெயின் தெரிவித்தார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பணம் காரணமா என அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அத்துறை அளித்த அதிகாரபூர்வ தகவலை அடுத்து, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையில், போதைப் பயன்பாடு, கொள்முதல், பயன்பாடு, அதைக் கொண்டு வருவது தொடர்பான உரையாடல்கள் உட்பட பல தகவல்கள் வெளியாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மும்முறை அழுத தீபிகா கோவாவில் படப்பிடிப்பில் இருந்த தீபிகா படுகோன், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணைக்காக தம் கணவரும் நடிகருமான ரன்பீர் சிங்குடன் மும்பை சென்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் தீபிகா ஒரு ‘வாட்ஸ்அப்’ குழுவைத் தொடங்கியதாகவும் அதில் போதைப் பொருள் தொடர்பில் விவாதிக்கப் பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. விசாரணையின்போது தீபிகா மூன்று முறை அழுததாகவும் அப்போது கண்ணீர் விடுவதெல்லாம் எடுபடாது என்று அதிகாரிகள் சொன்னதாகவும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
‘வாட்ஸ்அப்’ உரையாடல்களை அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஆயினும் தான் போதைப்பொருள் உட்கொண்டதில்லை, மற்றவர்களுக்கு விநியோகித்ததும் இல்லை என்று அவர் மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகே தீபிகாவை அதிகாரிகள் விடுவித்தனர்.