சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையேயான போக்குவரத்தைத் திறக்குமாறு ஜோகூர் அரசாங்கத்தை அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இதன்மூலம் தற்போதுள்ள எல்லைப்பகுதியைக் கடப்பதற்கான வழக்கமான நடைமுறையைக் காட்டிலும் நேரமும் செலவும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, கிருமிப் பரிசோதனை வசதிகள் எல்லை நுழைவாயில் பகுதியில் இருக்க வேண்டும். இதனால், முடிவுகளை மிக விரைவாக பெற முடியும்.
“மானியம் வழங்குவது உட்பட பரிசோதனைக்கான செலவும் ஆராயப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர்- மலேசிய எல்லை நீண்டகாலம் மூடப்படுவதால் வேலை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள 100,000 மலேசியர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நிலையில் ஜோகூர் இல்லை என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஹஸ்னி முகமதஉ அண்மையில் கூறியதைத் தொடர்ந்து டாக்டர் ராமகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.
மலேசியா மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தியதிலிருந்து அன்றாட போக்குவரத்துக்கு சிங்கப்பூர்- மலேசிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
ஜோகூரில் தற்போது 35,000க்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். வேலை இல்லாதோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 18 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று முதலமைச்சர் ஹஸ்னி தெரிவித்தார்.
“சிங்கப்பூரில் வேலை பார்க்கும் அதிகளவிலான மலேசியர்களின் எண்ணிக்கையும், பொருள் வாங்கவும் பொழுதுபோக்கிற்காகவும் எல்லையைக் கடந்து வரும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் மாநிலத்தின் பொருளியலுக்கு மிக முக்கியம்.
“ஆனால், துரதிஷ்டவசமாக எல்லையைத் திறப்பதில் மாநில அரசாங்கம் எவ்வித அவசரத்தையும் காட்டாமல் இருக்கிறது,” என்றார் டாக்டர் ராமகிருஷ்ணன்.
எல்லைப் போக்குவரத்து திறக்கப்பட வேண்டும் என்று பலதரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.