கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 87 பெண்கள் பாலியல் வன் புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். சென்ற 2019ஆம் ஆண்டில் மொத்தம் 405,861 பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் பதிவாகின. முந்தைய 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 7.3% அதிகம். இந்தியாவின் தேசிய குற்றப் பதிவகம் வெளியிட்ட ‘இந்தியாவில் குற்றங்கள்-2019’ எனும் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 32,033 பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகினர். இந்த எண்ணிக்கை 2018ல் 33,356ஆகவும் 2017ல் 32,559ஆகவும் பதிவானது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து இருப்பதை அந்த அறிக்கை காட்டுகிறது. 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5% கூடுதலாகப் பதிவாகின. அதாவது, குழந்தைகளுக்கு எதிராக 148,000 குற்றப் புகார்கள் பதிவாகின. அவற்றில் 46.6% கடத்தல் சம்பவங்கள் என்றும் 35.3% பாலியல் குற்றங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக, 2018ஐக் காட்டிலும் 2019ல் குற்றச் சம்பவங்கள் 1.6% அதிகமாகப் பதிவாகின. நாளுக்கு 79 கொலைகள் என்ற சராசரியில் சென்ற ஆண்டு 28,918 கொலைகள் நிகழ்ந்தன.
இளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ்
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரில் நால்வர் கும்பலால் சீரழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின் உயிரிழந்த 19 வயதுப் பெண்ணின் உடலை போலிசார் நேற்று அதிகாலையில் எரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தங்களை வீட்டிற்கு உள்ளே வைத்து போலிசார் பூட்டிவிட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச முதல்வரிடம் நேரில் பேசியதை அடுத்து, சம்பவம் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.