கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கை கள்) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததையடுத்து, கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் நிறுவனங்களும் தனிமனிதர்களும் வாடகை நிவாரணம் தொடர்பில் கூடுதல் உதவி பெறலாம் எனச் சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனா தொற்றின் தாக்கத்தை எதிர்கொள்வதில் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் ஆதரவளிக்கும் சட்ட நடைமுறைகள் மேலும் வலுப்பெறும் என்று அமைச்சு கூறியிருக்கிறது. இந்த மாற்றங்கள், வாடகை நிவாரண மதிப்பீட்டாளர்களுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கு வதோடு, கட்டுமானம் சார்ந்த தாமதங்களால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் உதவி கிடைக்கவும் வழிவகை செய்கின்றன.
புதிய விதிகளின்படி, வாடகை நிவாரணக் கட்டமைப்பின்கீழ் வழங்கப்படும் வாடகைக் கழிவு தொடர்பான சச்சரவுகளில் வாடகை நிவாரண மதிப்பீட்டாளர்களே இனி முடிவெடுக்கலாம். பராமரிப்பு, சேவைக் கட்டணங்கள் போன்ற பிரச்சினைகளால் தள்ளுபடித் தொகை பாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கும் இது பொருந்தும்.
ஆயினும், வாடகைத் தள்ளுபடி தொடர்பில் கட்டட உரிமையாளர்களும் வாடகைக்கு இருப்போரும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டு, நடப்பில் இருக்கும் ஏற்பாடுகளை வாடகை நிவாரண மதிப்பீட்டாளர்கள் மறுஆய்வு செய்ய மாட்டார்கள். அதே நேரத்தில், வாடகையில் எவ்வளவு தொகையைத் தள்ளுபடி செய்வது என்பது தொடர்பில் சச்சரவு இருப்போர், அதனை மறுஆய்வு செய்யும்படி வாடகை நிவாரண மதிப்பீட்டாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் கடந்த மாதம் 30ஆம் தேதி அல்லது அதற்குமுன் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் இருந்து ரொக்க மானியம் தொடர்பில் அறிவிப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றிருப்பின் இம்மாதம் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பின் அத்தகைய அறிவிப்புக் கடிதத்தைப் பெறுபவர்கள், கடிதம் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து பத்து நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டுமானம் சார்ந்த தாமதங்களால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவி கிடைக்க புதிய சட்டத் திருத்தங்களில் இடம்பெற்றுள்ள ஒரு நடைமுறை வழிவகுக்கிறது. கட்டுமானப் பணிக்காகப் பொருள்களை வாடகைக்கு எடுத்து, தாமதம் அல்லது ஒப்பந்த விதிமீறல் காரணமாக இப்போது கூடுதல் செலவுகளை எதிர்நோக்குபவர்களுக்கு நிவாரணம் வழங்க அந்த நடைமுறை இலக்கு கொண்டுள்ளது.
குடியிருப்பு அல்லாத கட்டடங்களில் வாடகைக்கு இருப்பவர்களில், வாடகையில்லாக் காலக்கட்டத்திற்குள் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாதோருக்கும் ஆதரவு கிடைக்கும். வாடகையில்லாக் காலத்தில் பயன்படுத்தப்படாத பகுதிக்கு நிவாரணம் வழங்கக் கோரி வாடகைதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சட்ட அமைச்சு கூறியுள்ளது.
இறுதியாக, கொரோனா நெருக்கடி காரணமாக கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து வாடகைதாரரிடம் கட்டடத்தை ஒப்படைக்க முடியாத, குடியிருப்பு அல்லாத கட்டடங்களின் உரிமையாளர்களும் இந்தப் புதிய நடைமுறையின்கீழ் உதவி பெற முடியும்.
உதவி கோரி விண்ணப்பிக்குமுன் விண்ணப்பதாரர்கள் தங்களது பாதிக்கப்பட்ட ஒப்பந்தம் இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறதா என்பதைச் சோதித்துக்கொள்ள வேண்டும்.
அந்த ஒப்பந்தம் மார்ச் 25ஆம் தேதிக்குள் நடப்பிற்கு வந்து, இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்கும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கும் இடையே தாமதம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதிக்குள் நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அந்தக் குறிப்பிட்டச் சூழல்களில் தாமதத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் சட்ட அமைச்சால் நியமிக்கப்படும் மதிப்பீட்டாளர் ஒப்பந்த விதிகளில் சில மாற்றங்களைச் செய்யலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.